கேழ்வரகு இனிப்புப் புட்டு
தேவையானவை:
கேழ்வரகு மாவு – ஒரு கப்
நாட்டுச் சர்க்கரை – முக்கால் கப்
தேங்காய்த் துருவல் – அரை கப்
ஏலக்காய் – ஒன்று (தூளாக்கவும்)
நெய் – 2 டீஸ்பூன்
தண்ணீர் – கால் டம்ளர்
உப்பு – அரை டீஸ்பூன்
செய்முறை:
கேழ்வரகு மாவுடன் சிறிதளவு உப்பு கலந்த நீரைத் தெளித்துப் பிசையவும். கட்டிகள் இல்லாதவாறு நன்கு உதிர்த்து எடுக்கவும். அனைத்து மாவும் நீருடன் கலந்து மென்மைத் தன்மை வந்ததும், காட்டன் துணியை நனைத்து நன்கு பிழிந்துவிட்டு, அதில் இந்த மாவைக் கொட்டி, மூடி இட்லித் தட்டில் வைத்து, 20 நிமிடங்கள் ஆவியில் வேகவைக்கவும். இதை முதல்நாள் இரவு செய்து வைத்து கொள்ளவும். அடுத்த நாள் காலை மீண்டும் இந்த மாவில் உப்பு கலந்த நீரைத் தெளித்து, உதிர்த்துக் கலந்து, 20 நிமிடத்தில் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். அதில் தேங்காய்த் துருவல், நாட்டுச் சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து நெய்விட்டுப் பரிமாறவும்.
குறிப்பு:
முளைகட்டிய கேழ்வரகு மாவாக இருந்தால் கூடுதல் சத்து கிடைக்கும். உடனே சாப்பிட வேண்டும் என்றால் ஒருமுறை ஆவியில் வேகவைத்தால் போதுமானது. இருமுறை வேகவைப்பதால் சுவை அதிகரிப்பதுடன் புட்டு, பூ போன்று மென்மையாகும்.