- ஜெயஸ்ரீ எம்.சாரி, நாந்தேட்.
சமீப வருடங்களில் நேர்மறைக்கு எதிராக பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தையே எதிர்மறை.
பன்னெடுங்காலமாக இந்த வார்த்தையானது, நம்மோடு, நம் வாழ்வியலோடு கலந்தே உள்ளது என்றாலும், திடீரென்று நமக்குள் திணிக்கப்பட்ட பல நவீனக்கால விஷயங்களில் ஒன்றாகவே இந்த நேர்மறையின் எதிர்பதச் சொல் அறியப்படுகிறது.
பல இல்லங்களில் இருக்கும் பெரியவர்கள் கூறும் அறிவுரைகளில் கூட எதிர்மறையான அர்த்தங்களை ஆராய்பவர்களும் உண்டு.
தமக்கு பிடித்தவர்கள் கூறும் நேர்மறைக்கு எதிரான சொற்கள் கூட சிலருக்கோ பிராக்டிகலாய் இருக்கும்.
உதாரணமாக, வீட்டுப் பெரியவர்கள் மற்றவர்களிடம் கொஞ்சம் சீக்கிரம் எழுந்துக் கொண்டால் சமயத்திற்குள் அலுவலகம் சென்று விடலாமே என்று கூறுகின்றார்கள் என்று வைத்துக் கொள்ளலாம்.உடனே, நாம் ” நாங்க லேட்டாக எழுந்துக் கொள்கிறோம் என்று சொல்கிறீர்களா?” என்று நம் சொல் அம்பால் ( அன்பால் அல்ல) அவர்களுக்கு பதிலுரைப்போம்.
” வண்டி சரியாக போகணும், ஆபீஸீக்கு லேட் ஆயிடக்கூடாது”- என்ற வார்த்தைகள் நமக்கு பிடித்த மனிதரிடம் இருந்து நாம் ஆபீஸ் கிளம்பும் போது வந்தாலும், நாம் எவ்வளவு ப்ராக்டிகலாய் பேசுகிறார் என்று கூறுவதே நடைமுறையாகி விட்டது.
நம்மில் பலர் பலருக்கு பலவிதங்களில் உதவியிருப்போம். அவ்வாறு செய்யும் போதெல்லாம், பல நேரங்களில் அவர்களின் எதிர்மறையான எண்ணங்களினால் நாமும் பாதிப்படைந் திருப்போம். ஆனால், தானியத்தை சுத்தம் செய்யும் முறம் போலவும், மாவை சுத்தப்படுத்தும் சல்லடை போலவும் நாமும் நம்முடைய நல்ல மன உணர்வினால் அவர்களின் எதிர்மறை எண்ணங்களுக்கு அர்த்தம் இல்லாமல் செய்து விடுகிறோம்.
விளக்காய் பலருக்கு வெளிச்சம் தருபவர்களுக்கு, அந்த தீபத்தினால் விளக்கின் விளிம்பில் ஏற்படும் கருப்பான அழுக்கு என்றுமே எதிர்மறையாகாது. மாறாக, மறந்தால் ( கருப்பழுக்கை துடைத்தால்) மனதிலே திருப்தி என்னும் தீபம் ஏற்படும், விளக்கும் மீண்டும் பளிச்சிடும்.
சேற்றினை ஏற்று செந்தாமரை வளர்கிறது, முட்களை அனுசரித்து ரோஜாக்கள் மலர்கிறன்றன, வேலிகளையும் ஒத்து அழகிய வண்ண மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன, கடல் மண்ணிலும் ஊற்று நீர் ஊறுகிறது.
அதேப்போல், வாழ்வியலில் ஒரு அங்கமாகவும்- நேர்மறையின் எதிர்பதமாகவும் கருதப்படும்- எதிர்மறைக்கு முக்கியத்துவம் கொடுக்காமலும், அதே சமயத்தில் எதிர்மறை எண்ணத்தை நம் அன்பு, நம்பிக்கை, விடாமுயற்சி, ஊக்குவித்தல் என்னும் நேர்மறைப் பண்புகளினால் வெல்ல முயற்சித்தலே சாலச் சிறந்தது.