ஓரங்க நாடகம்! ஒருகோடி பாத்திரம்!
உள்ளத்தில் திரைஏறுது! – கதை
உயிருள்ள வரைஓடுது!
யாரங்கு நாயகன்? யார்நின்று பார்ப்பவன்?
யாருக்காய் அரங்கேறுது? – பிறர்
யாருக்கும் புரியாதது!
*
என்னென்ன ஒப்பனை! ஏதேதோ கற்பனை!
எனைநானே தினம்பார்க்கிறேன்! – என்
இதயத்தில் கனம்சேர்க்கிறேன்!
எண்ணற்ற ஆடைகள்! ஏய்க்கு(ம்)முக மூடிகள்!
எளிதாக தின(ம்)மாற்றுவேன்! – இங்கு
எனைநானே ஏமாற்றுவேன்!
*
அரிதாரம் என்பதென் ஆதாரம் ஆனது!
அதிலுண்மை நிற(ம்)மாறுது! – பொய்
அரங்கேறி எனைமீறுது!
புரியாத சொற்களைப் பூமாலை ஆக்கியே
புதிராயென் வாய்பேசுது! – அதில்
பொய்தானே மணம்வீசுது!
*
இல்லாத ஒத்திகை! எழுதாத வாசகம்!
இருந்தாலும் அரங்கேறுது! – தினம்
இதயத்தில் இஃதூறுது!
சொல்லாத காதைகள்! தொய்யாத காட்சிகள்!
தொடர்கின்ற தேயிவ்வுரை! – நான்
துஞ்சுதினம் அன்றேதிரை!
- இலக்கியவேல் சந்தர் சுப்ரமணியன்