மதுரையில் மறுமணம் செய்து கொண்ட பெண்ணை முதல் கணவரின் உறவினர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் சிம்மக்கல் அனுமன் படித்துறை பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமாருக்கும் மகேஸ்வரிக்கும் திருமணம் நடந்தது. திருமணமாகி சில ஆண்டுகள் ஆன நிலையில் முத்துக்குமார் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். தனிமையில் இருந்த வந்த மகேஸ்வரி மறுமணம் செய்து கொண்டுள்ளார்.
தனது இரண்டாவது கணவருடன் மகேஸ்வரி வசித்து வந்துதைக் கண்ட முத்துக்குமாரின் உறவினர்கள் ஆத்திரம் அடைந்து மகேஸ்வரியை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டியுள்ளனர். இந்நிலையில் ஒருநாள் மகேஸ்வரி வீட்டின் வெளியில் நின்றுகொண்டிருந்தார். அப்பொழுது முத்துக்குமாரின் சகோதரர் குமார் உட்பட 4 பேர் அங்கு வந்து மகேஸ்வரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முத்துக்குமார் இறந்து சில மாதங்களே ஆன நிலையில் உனக்கு இரண்டாவது திருமணம் தேவையா? எனக் கேட்டுள்ளனர். இதற்கு பதில் அளிக்காத மகேஸ்வரியை நான்குபேரும் அரிவாளால் வெட்ட முயன்றுள்ளனர். அப்போது அச்சமடைந்த மகேஸ்வரி அந்த பகுதியிலிருந்து ஓட முயற்சித்துள்ளார் விடாமல் அவரை துரத்தி அரிவாளால் வெட்டியுள்ளனர்.
அங்கு கூட்டம் கூடவே அவர்கள் தப்பியோடிவிட்டனர். பலத்த காயங்களுடன் ரோட்டில் சரிந்து விழுந்த மகேஸ்வரியை சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மகேஸ்வரியை அரிவாளால் வெட்டிய முத்துக்குமாரின் சகோதரர் உட்பட 4 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.