சென்னையில் ரயில் பயணி ஒருவர் இடுப்பில் 28 லட்ச ரூபாயை மறைத்து வைத்து கொண்டு வந்த நிலையில் அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பொதுமுடக்க காலம் என்பதால் மதுபானக்கடைகள் அனைத்தும் தமிழகத்தில் மூடப்பட்டுள்ளன. எனவே வெளி மாநிலங்களில் இருந்து மதுபானம் கடத்துவது அதிகரித்து வருகிறது. அதே போல் சாராயமும் கடத்தப்படுகிறது.
இந்நிலையில் ஆந்திரா, கர்நாடகாவிலிருந்து சென்னைக்கு ரயில் மூலம் மதுபான பாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
ஹைதராபாத்திலிருந்து சென்னை வந்த ரயில் பயணிகளிடம் சோதனை செய்தபோது , குண்டூரைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர் இடுப்பில் 28 லட்சம் ரூபாயை மறைத்து எடுத்து வந்ததாக தெரிகிறது .
அவரை விசாரித்ததில் கணக்கில் வராத பணம் என்பதால் , 28 லட்சம் ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் . மேலும் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.