சென்னை:
ஆண்டாள் குறித்த சர்ச்சை பெரிதான நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூருக்கே வந்து ஜீயரை சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்தார் தேமுதிக., தலைவர் விஜயகாந்த். அவரை சென்னைக்கு வந்திருந்த ஜீயர், நேரில் சந்தித்து, அவர் அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்து, ஆசி வழங்கினார்.
கடந்த ஜனவரி மாதம் 7ம் தேதி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கவிஞர் வைரமுத்து, ஆன்மிக அன்பர்கள் போற்றிக் கொண்டாடும் ஆண்டாள் குறித்து, அவர்கள் மனவேதனைப் படும் வகையிலான கருத்துகளைத் தேரிவித்தார். இது பக்தர்கள் மத்தியிலும், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி மக்களிடையேயும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் வைரமுத்து, இதுகுறித்து தனது டிவிட்டர் பதிவில், எவரின் மனமாவது புண்பட்டிருந்தால் அதற்காக தான் வருத்தப் படுவதாகக் கூறினார். ஆனால், வைரமுத்து தான் பேசிய பேச்சுக்காக ஆண்டாள் சந்நிதிக்கே வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் சடகோப ராமானுஜ ஜீயர் வலியுறுத்தினார்.
இதனிடையே, பாஜக.,வின் ஹெச்.ராஜா இந்த விவகாரம் குறித்து சென்னையில் நடந்த கூட்டம் ஒன்றில் பேச, தொடர்ந்து திமுக., உள்ளிட்ட கட்சிகள் வைரமுத்துவுக்கு ஆதரவாகப் பேச, இந்த விவகாரம் அரசியல் ரீதியாக திசை திரும்பியது. இந்நிலையில், தமிழக அரசியல் மட்டத்தில் முதலில் பாமக., நிறுவுனர் ராமதாஸ், ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்துவைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார். தொடர்ந்து, இந்து இயக்கங்கள் சாராத அரசியல்வாதியான டிடிவி தினகரனும் ஆதரவு தெரிவித்தார். பின்னர் தேமுதிக., தலைவர் விஜயகாந்த், ஸ்ரீவில்லிபுத்தூருக்கே சென்று ஜீயரை சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்தார்.
இதனிடையே, மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் தலைமையில் சாதுக்கள் குழுவினர் தைலாபுரம் சென்று, தங்களுக்கு ஆதரவு தெரிவித்ததற்காக ராமதாஸுக்கு நன்றியைத் தெரிவித்தனர். அதன் தொடர்ச்சியாக, சென்னைக்கு வந்திருந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயரும், தேமுதிக., தலைவர் விஜயகாந்தை பிப்.5 திங்கள்கிழமை சந்தித்து, அவருக்கு நன்றி தெரிவித்து, மேன்மேலும் வளரவும், நினைத்தது நிறைவேறவும் ஆசி வழங்கினார்.
முன்னதாக, வைரமுத்து நேரில் வந்து மன்னிப்பு கேட்காவிட்டால் உண்ணாவிரதம் தொடங்கப் போவதாக அறிவித்திருந்த ஜீயருக்கு பக்தர்கள் பலர் வேண்டுகோள் விடுத்தனர். இதை அடுத்து, வைரமுத்துவுக்கு ஆதரவாகப் பேசிவரும் திமுக., உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கு எதிராகவும் அரசியல் ரீதியாக மாறிப் போயுள்ள இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணவும், ஜீயர் உள்ளிட்டோர் முயற்சி செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
Vijayakanth should ally with BJP. In fact all parties which have faith in true secularism and are not anti-Hindus should ally with BJP for the next General Elections.