நெல்லை மாவட்டம் தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால் குற்றால அருவிகளில் நீர்ப் பெருக்கு ஏற்பட்டது.
கோடைக்காலம் என்பதால், அருவிகளில் தண்ணீர் வரத்து இன்றி வறண்டு கிடந்தன. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் கடும் வறட்சி நிலவியது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் நல்ல மழைப் பொழிவு இருந்து வருகிறது.
ஏப்.21ம் தேதி காலை நிலவரப் படி, நெல்லை மாவட்டத்தில், செங்கோட்டையில் அதிகபட்சமாக 32 மி.மீ., மழை பதிவானது. தென்காசியில் 11.30 மி.மீ., ராதாபுரத்தில் 11 மி.மீ., ஆய்க்குடியில் 5.40 மி.மீ., பாபநாசம், சங்கரன்கோவில் ஆகிய பகுதிகளில் 1 மி.மீ., என மாவட்டத்தில் மொத்தம் 61.70 மீ.மீ., மழை பதிவானது.
மழை காரணமாக குற்றாலம் அருவியில் நீர்வரத்து அதிகரித்தது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான நெல்லை மாவட்டம் தென்காசி, குற்றாலம், செங்கோட்டை, புளியரை, வடகரை, மேக்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
இந்த மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள நீர்நிலைகளுக்கு நீர்வரத்து தொடங்கியுள்ளது. மேலும் குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து அதிகரித்தது.
குற்றால அருவியில் நீர்வரத்து தொடங்கியதை அறிந்த சுற்று வட்டாரப் பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் குற்றால அருவியை நோக்கி படையெடுத்தனர்.
குற்றால அருவியில் பரவலாக தண்ணீர் கொட்டுவதால் ஆண்களும், பெண்களும் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர். தொடர்ந்து இந்தப் பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது.
மழையின் தாக்கம் இன்னும் அதிகரித்தால் குற்றால அருவிகளில் கோடைகாலம் குளுமையான காலமாக இருக்கும் என சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் தெரிவித்தனர்.