மாமன்னர் பூலித்தேவன் நினைவு மண்டபத்தை அரசு சீரமைத்ததற்காக தமிழக அரசுக்கு பூலித்தேவன் வம்சாவளி வாரிசுகள் மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு கடந்த 2016ல் மாமன்னர் பூலித்தேவர் வம்சாவளி வாரிசுகள் சார்பாக அதன் அறக்கட்டளை செயலாளர் துரை. சூரிய பாண்டியன் அனுப்பிய கடிதத்தில், இந்திய சுதந்திரத்துக்காக முதன்முதலில் 250 ஆண்டுகளுக்கு முன் வெள்ளையரை எதிர்த்து 1751 முதல் 1767 வரை தொடர்ந்து 17 ஆண்டுகள் போர் செய்த நெல்கட்டான் செவல் மன்னர் பூலித்தேவர் 301 வது பிறந்த நாள் விழா செப்டம்பர் 1 அரசு விழாவாக கொண்டாட அம்மா அவர்கள் ஆணையிட்டு ‘அம்மா’ தலைமையில் விழா நடத்திட மிகவும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம் என்று குறிப்பிடப் பட்டிருந்தது.
இந்நிலையில் 2018ல் பூலித்தேவர் பிறந்தநாள் விழா 2018 செப்டம்பர் ஒன்றாம் தேதி முன்னூத்தி மூன்றாவது ஜெயந்தி விழாவாக தமிழக அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. அந்த நேரத்தில் மாமன்னர் பூலித்தேவர் கோட்டை மற்றும் திருவுருவச்சிலை ஆகியவற்றுக்கு வண்ணம் தீட்டவும் மின்விளக்குகளை சரி செய்யவும் பழுதடைந்துள்ள ஜன்னல் மற்றும் சுவர்களை சரி செய்யவும் உத்தரவிட வேண்டும் என்று மாமன்னர் பூலித்தேவர் நினைவு அறக்கட்டளை சார்பில் கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.
செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது. இந்நிலையில் அரசின் சார்பில் மாமன்னர் பூலித்தேவர் நினைவு மண்டபத்தை செப்பனிட்டு ஜன்னல் பகுதிகளை சரிசெய்து வண்ணம் தீட்டும் பணி நிறைவடைந்துள்ளது
இதற்காக தமிழக அரசுக்கு மாமன்னர் பூலித்தேவர் நினைவு அறக்கட்டளையின் சார்பில் அதன் நிர்வாகிகள் மற்றும் நெல்கட்டான் செவல் ஜமீன் வம்சாவளிகள் விழா கமிட்டியினர் ஆகியோர் தங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறிய போது, 17 ஆண்டுகள் வெள்ளையனை எதிர்த்து முதல் இந்திய சுதந்திர போர் தொடுத்த நெல்லை மாவட்டம் நெல்கட்டான் செவல் மகாராஜா மாமன்னர் பூலித்தேவர் கோட்டை தமிழக அரசின் முயற்சியால் புது பொலிவு அடைந்துள்ளது. இதற்காக தொடர்ந்து 7 ஆண்டுகள் தமிழக அரசை வலியுறுத்தியது மாமன்னர் பூலித்தேவர் நினைவு அறக்கட்டளை!
இந்நிலையில் அரசு இதனை நிறைவேற்றித் தந்துள்ளது. இதற்கு வலியுறுத்திய அனைத்து சமுதாய தலைவர்களுக்கும் மாமன்னர் பூலித்தேவர் நினைவு அறக்கட்டளை சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்! என்று கூறினர்.