சென்னை: பொறியியல் படிப்புக்கு செமஸ்டருக்கு ரூ.15 ஆயிரம் வரை கல்விக் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அண்ணா பல்கலைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று, உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
சென்னை, தரமணியில் சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வை அமைச்சர் அன்பழகன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தமிழகத்தில் தேவைக்கு அதிகமாகவே பொறியியல் கல்லூரிகள் உள்ளன. மாணவர் சேர்க்கை இல்லாததால் 15 பொறியியல் கல்லூரிகள் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கையே வேண்டாம் என்று கூறிவிட்டன. ஏற்கெனவே சேர்ந்த மாணவர்கள் தங்கள் படிப்பை முடிக்கும் வரை கல்லூரியை நடத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. மாணவர் சேர்க்கை இல்லை என்றால் பொறியியல் கல்லூரிகளை மூடுவதைத் தவிர வேறு என்ன வழி? என்று கூறிய அன்பழகன், பொறியியல் படிப்புக்கு ஒரு செமஸ்டருக்கு ரூ. 15 ஆயிரம் வரை கல்விக் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அண்ணா பல்கலைக்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளது என்று கூறினார்.