
கேள்வி:- தசாவதாரத்தில் புத்தர் அவதாரம் ஒன்றா? வரலாற்றில் காணப்படும் கௌதம புத்தர் இவர்தானா? ” நமோ பௌத்தாவதாராய தைத்யஸ்த்ரீ மானபஞ்சினே ஆசின்த்யாஸ்வத்த ரூபாய ராமாயாபந் நிவாரிணே!” என்று ஸ்ரீமதாபன்னிவாரக ஸ்தோத்திரத்தில் உள்ளது. இது பற்றி விளக்கவும் ….!
பதில்:- தசாவதாரங்களில் குறிப்பிடப்படும் புத்தர் கௌதமபுத்தர் அல்ல! புராதன புராண நூல்களைப் பரிசீலித்தால் இந்த விஷயம் தெளிவாகப் புரியும். திரிபுர அசுரர்களின் மனைவிகள் மகா பதிவிரதைகள். அவர்களின் பதிவிரதை சக்தியால் த்ரிபுராசுரர்களை யாராலும் வெல்ல இயலவில்லை. அப்போது அந்த சக்தியை அழிப்பதற்காக லோக க்ஷேமத்திற்காகவும் தர்ம ரட்சணைக்காகவும் ஸ்ரீமகா விஷ்ணு புத்தர் வடிவெடுத்தார். ஆனால் அந்த புத்தரும் கௌதம புத்தரும் அவதாரத்திலும் வடிவத்திலும் வெவ்வேறானவர்கள். அனைவரையும் கவர்ந்திழுக்கும் அழகு ரூபத்துடன் ஒரு அத்தி மரத்தடியில் தோன்றினார் மகா விஷ்ணு. புத்தர் அவதாரத்தில் அவரைப் பார்த்து மோகம் அடைந்து பதிவிரதா தர்மத்தை விட்டு விலகினார்கள் அப்பெண்கள். அதனால் த்ரிபுர அரசர்களின் பலம் குன்றியது. சிவபெருமான் கையால் அவர்கள் வதைக்கப்பட்டார்கள்.

இதே விஷயம் ஆபன்னிவாரக ராமரக்ஷா ஸ்தோத்திரத்தில் உள்ளது. “தைத்யஸ்த்ரீ மானபஞ்சினே!” என்றால் “ராட்சச பெண்களின் பதிவிரதை தன்மையை பங்கம் செய்தவன்” என்று பொருள். இவ்வாறு நம் புராணங்களில் புத்தர் பற்றி கூறப்பட்டுள்ளது.
மேற் சொன்ன சம்பவம் பற்றி அன்னமய்யா தசாவதார வர்ணனையில் குறிப்பிட்டுகிறார். “புரசதுல மானமுலு பொல்லசேஸின சேயி. ஆகசான பாரே ஊரி அதிவலமானமுல காகுசேயுவாடு” என்று கீர்த்தனை செய்துள்ளார். “ஆகாசத்தில் திரியும் ஊரார்கள் திரிபுர ராட்சசர்கள். அவர்களின் மனைவியரை தர்மம் தவறச் செய்தவர்”. அப்போதைய நிலைமையை பொறுத்து லோக ரட்சணைக்காக விஷ்ணு எடுத்த அவதாரம் அது. அந்த புத்தருக்கும் கௌதம புத்தரும் சம்பந்தம் இல்லை.
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா.
தமிழில்- ராஜி ரகுநாதன்


