சென்னை – கொல்லம், பாலக்காடு – திருநெல்வேலி, கொல்லம் – செங்கோட்டை ஆகிய ரயில்கள் அடுத்த 3 நாட்களுக்கு இரு மார்கத்திலும் ரத்து செய்யப் படுவதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
கேரள மாநிலத்தில் தென்மேற்குப் பருவ மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையால் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கேரளத்தில் ரயில்வே பாதையில் மரங்கள் விழுந்தும், நிலச்சரிவினாலும் பாதை பல இடங்களில் துண்டிக்கப் பட்டுள்ளது.
இதை அடுத்து, சென்னை – கொல்லம் 16101, கொல்லம் – சென்னை 16102, பாலக்காடு – திருநெல்வேலி 16791, திருநெல்வேலி – பாலக்காடு 16792 , செங்கோட்டை – கொல்லம் 56737, கொல்லம் – செங்கோட்டை 56738 ஆகிய ரயில்கள் அடுத்த மூன்று நாட்களுக்கு ரத்து செய்யப் படுவதாக தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
முன்னதாக, வெள்ளிக்கிழமை நேற்று காலை, சென்னையில் இருந்து கொல்லம் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் பாதையில் மரம் விழுந்ததால் தாமதமாகச் சென்றது. செங்கோட்டையில் இருந்து கொல்லம் செல்லும் போது பகவதிபுரம் ஆரியங்காவு இடையில் மரம் விழுந்து கிடந்ததைப் பார்த்த ரயில் ஓட்டுனர், உடனே ரயிலை நிறுத்தினார். உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். இதை அடுத்து மரம் அகற்றப்பட்ட பின் ஒரு மணி நேரம் காலதாமதத்தில் ரயில் புறப்பட்டு கொல்லம் சென்றது!