காவல்துறை சார்பில் மூன்றாம் கண் திட்டம் சென்னை முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் இனி ஒரு திருடர்களும் தப்பிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இந்தியர்கள், வெளிநாட்டவர்கள் என பலரும் பணி புரிந்தும் தொழில் நடத்தியும் வருகிறார்கள்.
அவர்கள் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் சென்னை காவல்துறை மூன்றாம் கண் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
சென்னையில் பாதுகாப்பை மேம்படுத்தும் விதமான பல்வேறு நடவடிக்கைகள் காவல்துறையால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் விதமாக மூன்றாம் கண் என்ற திட்டத்தின் மூலம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகின்றன,
முன்னதாகவே பல்வேறு பகுதிகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தாலும் தற்போது தொடங்கப்பட்டுள்ள மூன்றாம் கண் என்ற திட்டத்தின் மூலம் சென்னையின் சிறிய தெருக்களும் கூட கேமராக்களின் கண்காணிப்பில் இருக்கும் நிலை உருவாகி வருவதாக கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி கொள்ளை நடக்கும் இடத்தில் உள்ள வாகனம் மற்றும் நபரின் அடையாளம் மட்டுமே தெளிவாக காணப்பட்டு வந்தது. சில இடங்களில் நம்பர் பிளேட் தெளிவாக தென்படாத சூழ்நிலை உருவாகி வந்தது. இந்த நிலையில் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளை தெளிவாக படமெடுக்கும் அதி நவீன கேமராக்கள் சென்னையில் பொருத்தப்பட தொடங்கியுள்ளன.
வாகனங்களின் நம்பர் பிளேட்களை கூட தெளிவாக காட்டும்
தற்போது பொருத்தப்பட்டு வரும் இந்த வகை கேமராக்கள் சாலைகளில் செல்லும் வாகனங்களின் நம்பர் பிளேட்களை கூட தெளிவாக எடுத்து கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி வைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு சில வாகனங்களில் அரசு விதிகளை மீறி பல மாடல்களில் எண்கள் ஒட்டப்பட்டுள்ளது. இந்த கேமரா அதையும் தெளிவாக படமெடுக்கும்.
இதன் மூலம் வாகனம் சாலையைக் கடக்கும் நேரம், இடம் என அனைத்தும் உடனடியாக சேமிக்கப்படுகின்றன. இந்த முறையின் மூலம் காணாமல் போன வாகனங்களை இந்த கேமராக்கள் மூலம் அடையாளம் காணமுடியும்.
வாகன எண்களை ஸ்கேன் செய்து கொண்டே இருக்கும் போது, கட்டுப்பாட்டு அறையில் காணாமல் போன வாகனத்தின் எண்ணை பதிவு செய்தால் போது ஸ்கேன்கள் அந்த வாகனம் எங்கே உள்ளது என்பதை கண்டுபிடித்து விடலாம் என தெரிவிக்கப்படுகிறது.
காவல்துறையினர் வாகன சோதனை செய்து கொண்டிருக்கும் போது நிற்காமல் செல்லும் வாகனங்கள், விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் தப்பித்து செல்லும் வாகனங்கள் உள்ளிட்டவற்றை எளிதாக அடையாளம் காண முடியும் என பல்வேறு சிறப்புகள் இந்த கேமராவில் அடங்கியுள்ளது.