கோவையில் பிறந்த நாள் அன்று அங்குள்ள பூங்கா ஒன்றில் பிறந்த நாள் கொண்டாடிய பிளஸ் 1 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த நண்பரான முக்கியக் குற்றவாளி மணிகண்டன், கோவை மகளிர் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தான்.
கோவையில் பிளஸ் 1 படிக்கும் 17 வயது மாணவி கடந்த 26ஆம் தேதி தனது பிறந்தநாளை முன்னிட்டு ஆண் நண்பர்களுடன் பார்க்கில் பிறந்த நாள் கொண்டாடியுள்ளார். அப்போது அவரது ஆண் நண்பர் அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், ஒருவர் செல்போனில் வீடியோ படம் பிடிக்க, மற்ற நால்வர் அந்தப் பூங்காவுக்குள் வேறு யாரும் வராத வகையில் கண்காணித்ததாகவும் கூறப் படுகிறது.
பின்னர் வீடு திரும்பிய மாணவி, மறுநாள் தாயிடம் சம்பவத்தை விவரித்தார்! அதிர்ச்சியடைந்த பெற்றோர் கோவை மாநகர மேற்கு பகுதி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.
இந்தப் புகாரின் பேரில் போலீசார் சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ராகுல் (22), பிரகாஷ்(22), கார்த்திகேயன்(28), நாராயணமூர்த்தி (30) ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். இவர்கள் மீது சிறுவன் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கொலை மிரட்டல், ஆபாசமாக வீடியோ எடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மணிகண்டன் உள்பட இருவர் தலைமறைவாக இருந்தனர். இவர்களை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் கோவை மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி ராதிகா முன்னிலையில் மணிகண்டன் சரணடைந்தான்.