டிசம்பர் 3 இன்று சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம்! ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3ஆம் தேதி சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினமாக கொண்டாடப்படுகிறது .
உடல் ஊனமுற்றோர் என்ற சொல்லுக்கு பதில் மாற்று திறனாளிகள் என்ற சொல்லே பல உண்மைகளையும் இயற்கைக் கூறுகளையும் தெரியப்படுத்துகிறது.
உடல் ஊனம் என்பது அவர்களின் தவறல்ல . அது இயற்கை ஏற்படுத்திய வடிவம். ஆனால் உடலின் ஒரு பகுதியில் குறை இருக்கும் மனிதர்களுக்கு இன்னொரு பகுதியில் அசாதாரண திறமை இருப்பதை காண்கிறோம். மாற்றுத்திறனாளிகளை இகழ்ந்து ஒதுக்காமல் அவர்களுக்கு ஒத்துழைப்பும் அந்த குறையை ஈடு செய்யும் உபகரணங்களும் அளித்து ஆதரிக்க வேண்டியது நம் அனைவரின் கடமை.
அதை நினைவுபடுத்தும் விதமாகவே ஐநா சபை ஆண்டிற்கு ஒருமுறை இந்த தினத்தைக் கொண்டாடுவதற்கு தீர்மானித்தது. இன்றைய தினம் மாற்றுத்திறனாளிகளின் பல்வகை திறமைகளை வெளிப்படுத்தும் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
அவர்களுக்கு தேவையான பரிசோதனைகள் செய்யப்பட்டு கருவிகள் இணைக்கப்பட்டு சராசரி இயல்பு வாழ்க்கைக்கு இணங்க அவர்களும் இந்த சமுதாயத்தில் சுதந்திரமாக வாழ வழிவகை செய்யப்படுகிறது.
உலகில் பயனற்றவர்கள் என்று யாருமே கிடையாது. ஒன்றில் குறைந்தவர் இன்னொன்றில் உயர்ந்திருப்பார்.யாருமே அதிக புத்திசாலியுமல்ல. யாருமே அதிக முட்டாளுமல்ல. இவ்விரண்டிற்கும் இடையிலேயே மனித வாழ்க்கை இயங்குகிறது.
உட்கார்ந்து இருக்கும் இடத்தில் இருந்து எழுந்திருக்க இயலாவிட்டால் அது உடற்குறை. அப்படிப்பட்டவருக்கு எழுந்திருக்க உதவாமல் இருப்பது மனக்குறை.
இது குறித்த விழிப்புஉணர்வு ஏற்படுத்தும் விதமாகவே இந்த நாள் முக்கியத்துவம் பெறுகிறது. 1992இல் ஐநா சபை ஊனமுற்றோருக்கு மனோ தைரியம் அளித்து அனைத்து துறைகளிலும் அவர்களை முன்னேறச் செய்யும் விதமாக ஊக்குவிப்பதற்கு டிசம்பர் 3 ஆம் தேதியை தீர்மானித்தது.
1995 ஆம் ஆண்டு மத்திய அரசு சட்டம் இயற்றி 96 இல் அமலுக்கு வந்தது. அதில் ஊனமுற்றோருக்கு சம வாய்ப்புகள், சம உரிமைகள், உரிமைகள் பாதுகாப்பு, முழு உரிமை சட்டம் போன்றவை அளிக்கப்பட்டன.