கோவை பெரியதடாகம் பகுதியில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு டாப்சிலிப் வனப்பகுதியில் விடப்பட்ட சின்னதம்பி யானை, இன்று அதிகாலை பொள்ளாச்சி அடுத்த அங்கலக்குறிச்சி கிராமத்தில் மீண்டும் நுழைந்துள்ளது.
கோவை பகுதியில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தியதாக விவசாய சங்கத்தினர் புகார் தெரிவித்தனர். இதையடுத்து கடந்த 25ஆம் தேதி பெரிய தடாகம் பகுதியில் கூட்டத்தில் இருந்து தனியே பிரிந்து வந்து, கிராமங்களில் சுற்றித் திரிந்த யானை சின்னத்தம்பி மயக்க ஊசி போடப்பட்டு, வனத்துறையினரால் லாரி மூலம் டாப்சிலிப் கொண்டு செல்லப்பட்டு விடப் பட்டது.
இதனிடையே இன்று காலை கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த அங்கலக்குறிச்சி கிராமத்துக்குள் மீண்டும் சின்னத்தம்பி யானை புகுந்தது. அங்கு வந்த வனத்துறையினர் சின்னத்தம்பி யானையை வனப்பகுதிக்குள் பட்டாசு வெடித்து விரட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.