நெல்லை மாவட்டம் சீவலப்பேரி அருகே பாலாமடை கட்டளையில் குளம் ஒன்று உள்ளது. இந்த குளத்தின் கரையில் பனங்காடு உள்ளது. இந்த பகுதியில் இருந்து இன்று காலை குழந்தையின் அழுகுரல் சத்தம் ஒன்றுக் கேட்டது.இதனால் அந்த வழியாக சென்றவர்கள், அழுகுரல் வந்த திக்கை நோக்கி சென்று சுற்றுமுற்றும் பார்த்தபோதுதான் அங்குள்ள மரத்தின் வேர்களுக்கு இடையில் ஒர் பச்சிளம் பெண் குழந்தை அழுது கொண்டிரிந்ததை கண்டனர். யாரோ குழந்தையை உயிருடன் போட்டுவிட்டு சென்றது தெரியவந்தது. பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தை என்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள், ஆம்புலன்ஸ் மூலம் குழந்தையை மீட்டு பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தற்போது சிகிச்சையில் உள்ள குழந்தை நலமாக இருப்பதாகவும், பரிசோதனைக்கு பின்னர் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
குழந்தையின் பெற்றோர் யார், எதற்காக குழந்தையை குளத்தின் அருகே வீசிச் சென்றனர், பெண் குழந்தை என்பதால் வீசிச் சென்றனரா என்பது குறித்து சீவலப்பேரி காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.