சாலை விதிமீறல்களுக்கான அபராத தொகையை குறைக்க வாய்ப்பில்லை என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கை துவக்கி வைத்தனர்.
அடுத்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சாலை பாதூகாப்பு தொடர்பாக மத்திய அரசு பல்வேறு சட்டங்கள் கொண்டு வந்தாலும், மக்களுக்கு பயனளிக்கும் வகையில் சில மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்றார்.
சாலை விதிமீறல்களுக்கு அபராதம் அதிகமாக உள்ள நிலையில், சாலை விதிகளை பின்பற்றினால் அபராதம் கட்ட தேவையில்லை என அவர் தெரிவித்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நாடுகளுக்கு சென்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்து வருகிறார். சாலை பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன எனவும் அவர் தெரிவித்தார்
இதையடுத்து பேசிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், போக்குவரத்து துறையில் ஏற்பட்ட இடர்பாடுகளை களைய, மத்திய அரசுடன் பேசி முதலமைச்சர் ஒரளவு வெற்றி பெற்றுள்ளார் எனவும், சாலை விபத்துக்களை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
போக்குவரத்து துறை அதிகாரிகள் எடுத்த முயற்சியினால் தமிழ்நாட்டில் கடந்த ஒராண்டில் சாலை விபத்துகள் 24 சதவீதம் குறைந்துள்ளது எனவும், தமிழ்நாட்டில் கடந்த 6 மாதங்களில் 15 சதவீதம் விபத்துகளும், உயிரிழப்புகளும் குறைந்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின்கட்கரி நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
போக்குவரத்து துறையில் 94 சட்ட திருத்தங்களில் 5 சட்ட திருத்தங்களில் மாநில உரிமை பாதிக்கப்படுகிறது, அவற்றை திருத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளதாகவும் கூறினார். தமிழ்நாட்டிற்கு என தனியாக சட்டம் கொண்டு வர முடியாது என மத்திய அமைச்சர் நிதின்கட்கரி அழுத்தம் திருத்தமாக கூறினாலும், ஏற்படும் பாதிப்புகளை எடுத்து கூறி திருத்தங்களை கொண்டு வருமாறு கூறியுள்ளதாக அவர் தெரிவித்தார்.