உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட கூடாது என்று மக்கள் நீதி மய்யம் எடுத்த முடிவிற்கு பின் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கொடுத்த யோசனை இதற்கு முக்கிய காரணம் என்கிறார்கள்.
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார். அதன்படி எங்களுக்கு சட்டசபை தேர்தல்தான் முக்கியம் என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.
முதலில் உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என்றுதான் கூறப்பட்டது. இதற்காக ஆலோசனை கூட்டங்களும் நடத்தப்பட்டது .
ஆனால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட கூடாது என்று மக்கள் நீதி மய்யம் முடிவு செய்துள்ளது. அக்கட்சியின் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரின் ஆலோசனைதான் இதற்கு காரணம் என்கிறார்கள்.
உள்ளாட்சி பகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இருக்கும் பலம் குறித்து நேற்று கமல்ஹாசனிடம் பிரசாந்த் விளக்கி உள்ளார். அங்கு மக்கள் எப்படி மக்கள் நீதி மய்யம் கட்சியை பார்க்கிறார்கள். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது தேவையில்லாத விஷயம். அது கட்சிக்கு இருக்கும் ஆதரவாளர்களை குறைக்கும்.
அதோடு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தால், அது தொண்டர்களை கட்சி மாற வைக்கும். சட்டசபை தேர்தல்தான் உங்களின் ஒரே குறிக்கோளாக இருக்க வேண்டும். அதனால் அதை மட்டும் செய்யுங்கள். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடாமல், உள்ளாட்சி கட்சி உறுப்பினர்கள் மீது கவனம் செலுத்துங்கள் என்று கூறியுள்ளார்.
அதேபோல் உங்கள் கட்சி புதியது, உங்களிடம் நிதி குறைவாக இருக்கிறது. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அதிக நிதி செலவாகும். இன்னும் இரண்டு வாரங்களில் அவ்வளவு நிதியை கண்டிப்பாக திரட்ட முடியாது. அதனால் தேர்தலில் போட்டியிடாமல் இருப்பதே நல்லது என்று அறிவுரை வழங்கி உள்ளாராம்.
நேரத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திட்டத்தில் இருக்கும் மக்கள் நீதி மய்யம் பின்வாங்கியது என்று கூறுகிறார்கள். இதனால் மக்கள் நீதி மய்யம் சட்டசபை தேர்தலுக்கான திட்டங்களை வகுக்க தொடங்கும் என்றும் கூறுகிறார்கள்.