சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற கண்காட்சியில் இந்து மத கடவுளர்களை அவமரியாதை செய்யும் வகையிலும், பாரத மாதாவை இழிவுபடுத்தும் வகையிலும், ஆர்.எஸ்.எஸ். பாஜக., மத்திய அரசின் திட்டங்கள், பிரதமர் மோடியை அவதூறாக விமர்சித்தும் கண்காட்சியில் ஒவியங்கள் வைக்கப்பட்டன. இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. லயோலா கல்லூரிக்கு எதிராக புகார்கள் பதிவாயின.
இந்நிலையில், தமிழகத்தில் கிறிஸ்துவ சர்ச்சுகளால் வளர்க்கப்பட்ட அரசியல்வாதிகளும் அரசியல் கட்சிகளும் வழக்கம் போல் வாய்மூடி மௌனிகள் ஆகிவிட்டனர். இந்த விவகாரத்தில் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், பாமக., நிறுவுனர் ராமதாஸ், இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இது போன்ற நிகழ்ச்சிகள், கலையை வளர்க்காது, பகையைத்தான் வளர்க்கும் என்று கூறியுள்ளார்.
அவரது டிவிட்டர் பதிவுகளில்…
சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்றதைப் போன்ற ஓவியக் காட்சிகள் ஒருபோதும் கலையை வளர்க்காது. மாறாக பகையைத் தான் வளர்க்கும். கருத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி கலை என்ற பெயரில் நல்லிணக்கத்தையும், அமைதியையும் கெடுக்கும் எந்த நிகழ்வையும் இனி அரசு அனுமதிக்கக்கூடாது!
சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியில் இந்துக்களின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் சில ஓவியங்கள் இடம்பெற்றிருந்தது கண்டிக்கத்தக்கது. கலை வடிவங்கள் அனைவரையும் மகிழ வைக்கவே தவிர, யாரையும் காயப்படுத்துவதற்கு அல்ல என்பதை அனைவரும் உணர வேண்டும்! – என்று குறிப்பிட்டுள்ளார்.