இந்த நாள்.. தர்ம யுத்தம் தொடங்கியதன் நினைவு நாள் என்று தன் நினைவுகளை அசை போட்டுள்ளார் அதிமுக., எம்.பி., மைத்ரேயன்!
அவர் தனது பேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ள விவரம்.. “இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே நாள் 07/02/2017 அன்று ஓபிஎஸ் அவர்கள் தர்மயுத்தம் தொடங்கிய போது முதல் நபராக இரவு 12.15 மணிக்கு அவரது தென்பெண்ணை இல்லம் சென்று அவருக்கு எனது தார்மீக ஆதரவை அளித்தேன். அன்று தொடங்கி கடந்த இரண்டு ஆண்டு நிகழ்வுகளை அசை போடுகிறேன். இது பற்றிய என் கண்ணோட்டங்களை பின்னொரு நாளில் பதிவிடுகிறேன்.”
கடந்த இரு வருடங்களாக ஓபிஎஸ்ஸுடன் இருந்து கொண்டு அரசியல் செய்து வருகிறார் வா.மைத்ரேயன்! ஓபிஎஸ்., பின்னாளில் அதிமுக.,வில் இணைவதிலும், ஓபிஎஸ்ஸுக்கு அவமரியாதை நேரும் போதெல்லாம் போர்க்கொடி தூக்கி அதை சரிசெய்வதிலும், தில்லியி தனக்குள்ள தொடர்புகளை பயன்படுத்தி, ஓபிஎஸ்ஸை தில்லியில் செல்வாக்கு பெற வைப்பதிலும் என மைத்ரேயன் செய்த பணிகளுக்கு இப்போது இந்த இரண்டாம் ஆண்டை நினைவுகூரும் வகையில் அதிமுக.,வில் நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன.
தில்லி தொடர்புகளால் மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் பாலமாக இருந்தவர் மைத்ரேயன். பாஜக., அதிமுக., உறவுக்கும் கூட்டணிப் பேச்சுகளுக்கும் பலமாக இருக்கவேண்டியவரை துரையும் மணிகளும் புகுந்து கலைத்துவிட்டதால்… இப்போது இரண்டாம் ஆண்டு நினைவுகளைப் பதிவிடும் நிலையில் இருக்கிறார் என்றே எண்ணத் தோன்றுகிறது!