வேலூர்: திமுக., கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் வீட்டில் வருமானவரி துறையினர் சோதனை செய்ததில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது.
வேலூரில் திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு சொந்தமான கல்வி அறக்கட்டளை வளாகத்தில் கட்டுக் கட்டாக பணம் சிக்கியதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். காட்பாடியில் திமுக பொருளாளர் துரைமுருகன் மகனுக்கு சொந்தமான கிங்ஸ்டன் கல்லூரியில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
வேலூர் மக்களவைத் தொகுதியின் திமுக வேட்பாளராக கதிர் ஆனந்த் போட்டியிடும் நிலையில் அவருடைய கல்லூரியில் சோதனை மேற்கொள்ளப் பட்டுள்ளது.
இரு தினங்களுக்கு முன்னர் வேலூரில் உள்ள துரைமுருகனின் வீட்டில் வருமானவரித்துறை, தேர்தல் கண்காணிப்பாளர்கள் போலீஸார் உதவியுடன் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, எதுவும் சிக்கவில்லை என்று செய்திகள் பரப்பப் பட்டன.
ஆனால், பெருமளவில் பணம் பறிமுதல் செய்யப் பட்டுள்ளதாகக் கூறப் பட்டது. இருப்பினும், துரைமுருகன் வெளியில் சொன்னபோது, அதிகாரிகள் வந்தனர், எதுவும் அகப்படவில்லை, வெறும் கையுடன் திரும்பிச் சென்றனர் என்று கூறினார்.
ஆனால், பெருமளவில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய, தொகுதி வாரியாக, பகுதி வாரியாக பொட்டலம் கட்டப்பட்டு, மூட்டை மூட்டையாய்… பெட்டி பெட்டியாய்… பணம் கைப்பற்றப் பட்டுள்ளது. இதனால் வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வார்டு வாரியாக பணப்பட்டுவாடா செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்ட பணம் பறிமுதல்… செய்யப் பட்டுள்ளதால், இது வாக்காளர்களுக்கு விநியோகம் செய்யப் படுவதற்காகவே பதுக்கி வைக்கப் பட்ட பணம் என்பது உறுதி செய்யப் பட்டுள்ளது.
தொடர்ந்து வேலூரில் திமுக பொருளாளர் துரைமுருகனின் நண்பர் சீனிவாசன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
[videopress q2rPXNCT]