திருப்பூர் மாவட்டம் கண்டியன் கோவில் பகுதியில் ஆளில்லாத ட்ரோன் மூலம் பெண்கள் குளிப்பதை வீடியோ எடுப்பதாக தனியார் நிறுவனம் மீது அப்பகுதியில் உள்ள பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.
திருப்பூர் கண்டியன் கோவில் சுற்றுவட்டாரப் பகுதியில் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தினர் குழாய் பதிப்பதற்காக சட்டவிரோதமாக ஆளில்லா விமானம் மூலம் நில அளவீடு செய்துள்ளனர்.
அதனைப்பார்த்த மகளிர் குழுக்கள் ஆவேசம் அடைந்துள்ளனர். கண்டியன் கோவில் பகுதியில் சுமார் 1000 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
அப்பகுதிகளில் அதிகப்படியாக சாதாரண வீடுகளே இருந்து வருகின்றன.அதில் பெரும்பாலானோர் வீட்டில் மேற்கூரை இல்லாத குளியலறை வசதியைக் கொண்டது. மேலும் தோட்டத்தில் அதிகமான பெண்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
தோட்டத்தில் வேலையின் காரணமாக பெண்களின் சேலை விலகுவது சாதாரணமான ஒரு நிகழ்வு. இந்நிலையில் பாரத் பெட்ரோலிய நிறுவனம் ஆளில்லா விமானம் மூலம் நிலஅளவீடு செய்தால் பெண்கள் குளிப்பது மற்றும் தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருப்பது அதில் பதிவாகும்.
இதுகுறித்து அறிந்த அப்பகுதி பெண்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டவிரோதமாக ஆளில்லா விமானம் மூலம் படம் பிடிக்க உத்தரவு கொடுத்த அதிகாரிகள் மற்றும் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்துள்ளனர்.
மேலும் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் மீது எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.