
தமிழகத்தில் தற்போது புதிதாக 5 மாவட்டங்கள் உருவாகியிருக்கின்றன. ஏற்கெனவே இருந்த நெல்லை, வேலூர், விழுப்புரம், காஞ்சிபுரம் மாவட்டங்கள் பிரிக்கப் பட்டு, புதிதாக 5 மாவட்டங்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளன.
இவற்றில், நெல்லை, காஞ்சிபுரம் மாவட்டங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகவும் பாரம்பரியப் பெருமிதமும் பெருமையும் கொண்டவையாகவும் விளங்கின.
காஞ்சிபுரம் மாவட்டம் முன்னர் செங்கல்பட்டு மாவட்டமாக இருந்த போது, பெரிய மாவட்டமாகவும், ஏரிகளின் மாவட்டமாகவும் பெயர் பெற்றிருந்தது. பின்னாளில் அது காஞ்சிபுரம் மாவட்டமாக மாறி, தற்போது, காஞ்சிபுரத்தில் இருந்து பிரிந்துள்ளது. இதனால் பல்வேறு பெருமிதங்கள், பெருமைகள், சுற்றுலாச் சிறப்புகள் காஞ்சியை விட்டு நீங்கியுள்ளன. அது இனி செங்கல்பட்டுக்கு உரியதாகும்.
அது போல், நெல்லைச் சீமை என்றால் பொருனைத் தமிழும், அகத்தியமும், பொதிகையும், பரணியும், அதன் வீரமும் வெளித் தெரியும். பின்னாளில் நெல்லையில் இருந்து தூத்துக்குடி பிரிந்தது. தற்போது நெல்லையின் இன்னொரு பெருஞ்சிறப்பான தென்காசி பிரிவு கண்டுள்ளது.
இது பலருக்கு வருத்தத்தைத் தந்திருக்கிறது. நெல்லைச் சீமை என்று காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு பெருமிதத்துடன் சொன்னவர்கள், இனி தென்காசிச் சீமை என்று சொல்லியாக வேண்டும்.
இப்படி ஒரு பட்டியலை நெல்லைக்காரர்கள் எடுத்து முன்வைத்து, அதனை அலசி ஆய்ந்து கொண்டிருக்கிறார்கள். எது எதெல்லாம் நெல்லைக்கு சிறப்பு சேர்த்தன, இப்போது நம் கையை விட்டுப் போகின்றன என்று பலரும் சமூகத் தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
முன்னர் திமுக., தலைவர் கருணாநிதி அடிக்கடி சொல்லுவார்… மதுரையே நம் எல்லை, நெல்லை நமக்குத் தொல்லை என்று! அதற்கு வைகோ.,வும் ஒரு காரணமாக இருந்தார். இப்போது மதிமுக., தலைவர் வைகோ., தென்காசிக் காரர் ஆகிவிட்டார். அவரது ஊர் இனி தென்காசியில் வந்துவிடும். எனவே கருணாநிதி இப்போது இருந்திருந்தால்…. நெல்லையை தொல்லை என்றிருக்க மாட்டார்தான்!

அதில்… இருந்து!
தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டமான நம் நெல்லை பிரிக்கப்பட்டுவிட்டது. இதுநாள் வரை நெல்லையின் பெருமிதங்களாக நாம் கொண்டாடி வந்த பல அம்சங்கள் நம்மைவிட்டு போயிருக்கின்றன.
கேரள எல்லை இனி நெல்லையிடம் இல்லை:
கேரள மாநிலத்தோடு சாலை வழி எல்லையை பகிர்ந்து கொள்ளும் வெகு சில மாவட்டங்களுள் ஒன்றாக நம் நெல்லை இருந்துவந்தது. தென்காசியின் பிரிவால் இனி எல்லை நம்மிடம் இருக்கப்போவதில்லை. பார்டர் புரோட்டா கடையும் தென்காசி மாவட்டத்துக்காரரின் கடையாகி விட்டது!
வீரபூமியின் பெயர் மாறிவிட்டது:
கட்டபொம்மனையும் பாரதியையும் தூத்துக்குடி எடுத்துக் கொண்டது போல வாஞ்சிநாதனையும்,பூலித்தேவனையும் தென்காசி எடுத்துக் கொண்டுவிட்டது.
குற்றாலம் இனி அண்டை மாவட்ட சுற்றுலாத் தலம்:
“நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சீசன் களைகட்டுகிறது” என்று இனி எந்தப் பத்திரிகையும், செய்திச் சொல்லப் போவதில்லை. பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் சென்னைக்கும் தென்காசி மாவட்டம் செங்கோட்டைக்கும் இயக்கப்படும் ரெயிலாக மாறிவிட்டது.
திருமங்கலம் – செங்கோட்டை நான்கு வழிச்சாலை பிரச்னை இனிமேல் தென்காசி மாவட்டத்தின் பிரச்னை.
நகரங்களை இழந்த நெல்லை:
பழைய நெல்லை மாவட்டத்தில் நம் நெல்லைக்கு அடுத்து பெரிய நகரங்களாக இருந்த சங்கரன்கோவிலும், கடையநல்லூரும் தென்காசியோடு இணைந்துள்ளது இழப்பு தான் நமக்கு. பிற நகரங்களான புளியங்குடியும் செங்கோட்டையும் அங்கு தான் போயிருக்கிறது.
தமிழ்நாட்டிலேயே அதிகமாக மேற்கு தொடர்ச்சி மலை படர்ந்திருக்கும் மாவட்டம் என்ற பெயரும் நம்மிடமிருந்து போயிருக்கிறது.
நெல்லைக்கே அல்வா:
சொக்கம்பட்டி அங்கு இணைந்துவிட்டதால் திருநெல்வேலிக்கே அல்வா கொடுத்த மாவட்டமாக தென்காசி மாறியிருக்கிறது.
வரமாட்டேன் என அழுது அடம்பிடித்த ஆலங்குளத்தையும் சங்கரன்கோவிலையும் தனது அதிகாரத்தால் தென்காசியோடு சேர்த்து வைத்துள்ளது அரசாங்கம்.
நிகழ்கால அரசியல் ஆளுமை வைகோ இனி தென்காசி மாவட்டத்துக்காரர் என்று அழைக்கப்படுவார். அமைச்சர் தொகுதியான சங்கரன்கோவிலை நாம் இழந்துவிட்டதால் அமைச்சர்களில்லாத மாவட்டமாக மாறி நிற்கிறோம்.!
இருந்தாலும் பரவாயில்லை..
பிரிவின் வலி தான் கொடியது. இது பிரிவல்ல பிரசவம்..! நம் நெல்லைக்கு இன்னொரு குழந்தை பிறந்திருக்கிறது.
ஆம், அதன் பெயர் தென்காசி.!