எல்லா வீட்டு வாசல்கள் மற்றும் தெருக்களில் மண்டை ஓடுகள் சிதறி கிடப்பதை பார்த்து பழனியை சேர்ந்த மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள தேவங்கர் தெருவில் உள்ள வீடுகள், கடைகளின் முன்பு மனிதனின் மண்டை ஓடுகள், எலும்புகள் சிதறி கிடந்தன. மண்டை ஓடுகளில் மஞ்சள், சிவப்பு மற்றும் கருப்பு நிற பொடிகள் தூவபட்டு இருந்தது.
கதவுகள் மற்றும் வாயில்களுக்கு சற்று முன்னால் அது வைக்கப்பட்டு இருந்தது. அதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள் பீதியில் உறைந்து போயினர். மந்திரவாதிகள் செய்வினை வைத்து விட்டார்களோ என்று அச்சமடைந்தனர்.
இந்த தகவல் அந்த பகுதியில் காட்டுத் தீ போல் பரவியதால் காவல்துறையினருக்கு தெரிய வந்தது. சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் மண்டை ஓடு மற்றும் எலும்பு கூடுகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
முதல் கட்ட விசாரணையில், குடித்துவிட்டு அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் இப்படி செய்து இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. இருந்தாலும் காவல்துறையினருக்கு சந்தேகம் வலுத்துள்ளதால், அந்த பகுதியில் பொறுத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.