அனைத்து நிலைகளிலும் செயல்பட்டு வரும் கழகப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும், எந்தவித முன்யோசனையும் இன்றி, கழகத் தலைமையின் ஒப்புதல் இல்லாமல் தொலைக்காட்சிகள் உள்ளிட்ட இன்னபிற ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும், தங்களின் தனிப்பட்ட கருத்துகளைத் தெரிவிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்…
ஊடக விவாதங்களில் கழக அரசின் சாதனைகளைப் பற்றியும், மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக, கழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களைப் பற்றியும் எடுத்துச் செல்லுங்கள் என்று, ஓ.பி.எஸ். இ.பி.எஸ் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து அமைச்சர்கள் சிலர் பேசிய பேச்சுகள் ஊடகங்களில் சர்ச்சை ஆன நிலையில், ஓபிஎஸ் சார்ந்த தேனி மாவட்டத்தில் ஜெயலலிதாவின் நம்பிக்கை பெற்றவர் ஓபிஎஸ்ஸே அடுத்த முதல்வர் என்று போஸ்டர் ஒட்டப் பட்டிருந்தது. அதனை சிலர் கிழிக்க, இது பெரும் பிரச்னை ஆனது.
இதை அடுத்து அமைச்சர்கள் சிலர், இபிஎஸ், ஓபிஎஸ் இருவரிடமும் சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் ஓபிஎஸ், இபிஎஸ், அமைச்சர்கள் ஆலோசனையை தொடர்ந்து அதிமுக சார்பில் அறிக்கை வெளியிடப் பட்டது. அந்த அறிக்கையில்,
பொறுப்பாளர்கள் தனிப்பட்ட கருத்துகள் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். தனிப்பட்ட முறையில் அரசியல் கருத்துகள் தெரிவிக்கும் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப் படும். மீண்டும் ஒரு தொடர் வெற்றியை பெற அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டிய நேரமிது.
அதிமுக தலைமையின் ஒப்புதல் இல்லாமல் கருத்துகளை தெரிவிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். தொலைக்காட்சிகளில் நிர்வாகிகள், கட்சித் தலைமை ஒப்புதல் இல்லாமல் தனிப்பட்ட கருத்துகளை கூறினால் நடவடிக்கை எடுக்கப் படும் என்று ஓபிஎஸ் – இபிஎஸ் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.