கம்பம் பகுதியில் சாலையில் கேட்பாரற்று கிடந்த பணம் மற்றும் செல்போனை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்த பள்ளி மாணவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்தவர் பள்ளி மாணவர் முத்துக்குமார். இவர் தனது நண்பர்களுடன் நேற்று நடந்து சென்றபோது, சாலையில் பர்ஸ் மற்றும் செல்போன் கேட்பாரற்று கிடந்தது. இதனை கண்ட முத்துகுமார் அதனை பத்திரமாக எடுத்து கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
தொடர்ந்து, காவல் ஆய்வாளர் கீதா பர்ஸ்சில் உள்ள முகவரியை தொடர்பு கொண்டு விசாரித்தபோது, அது கம்பம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. இதையடுத்து, மணிகண்டனை காவல் நிலையத்திற்கு வர வழைத்த போலீசார், மாணவர் முத்துக்குமார் கைகளால் பர்ஸ், அதில் உள்ள 5000 ரூபாய் பணம் மற்றும் செல்போனை ஒப்படைத்தனர்.
மேலும், பள்ளி மாணவரின் நேர்மையான செயலை ஊக்குவிக்கும் விதமாக, காவல் ஆய்வாளர் கீதா, மாணவரை நேரில் அழைத்து பாராட்டுகளை தெரிவித்தார்.