திருச்சி அருகே காதலர் தினத்தில் திருமணம் செய்து கொள்ளலாம் என ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்துள்ள பேச்சக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அருண்பாண்டியன் (27). கட்டடத் தொழிலாளியான இவருக்கு திருமணமாகி இரு கைக்குழந்தைகள் உள்ளன.
இந்நிலையில் தவறான செல்லிடைப்பேசி எண் அழைப்பில் அருகில் உள்ள கிராமத்தில் வசித்து வரும் கூலித் தொழிலாளியின் 20 வயது இளைய மகளுடன் கடந்த சில நாட்களாக பழகி வந்துள்ளார்.
தான் திருமணம் ஆகாத இளைஞர் என கூறி பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஆசை வார்த்தை கூறியதாக தெரிகிறது.
அதனைத்தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அருண்பாண்டியன், அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இந்நிலையில் அருண்பாண்டியன் திருமணம் ஆனவர் என்பது இளம் பெண்ணிற்கு தெரியவர தான் ஏமாற்றபட்டதை அறிந்து தனது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் நடந்தவற்றை கூற பயந்து தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் பெண்ணை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவிக்கு பின் மேல்சிகிச்சைக்காக திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனை தொடர்ந்து வையம்பட்டி போலீஸார் பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர், பின்னர் அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அருண்பாண்டியனை கைது செய்து மணப்பாறை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் முன்பு ஆஜர்ப்படுத்தி திருச்சி மாவட்டம், முசிறி கிளைச் சிறைச் சாலையில் அடைக்கப்பட்டார்