சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த சில நாட்களாக பொதுமக்களுக்கு குறுஞ்செய்தி மூலம் பிரபல நிறுவனங்கள் பெயரில் தகவல் அனுப்புகின்றனர்.
இதில், ரூ.3 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் என்று கூறி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். மோசடி நபர்கள் அனுப்பும் குறுஞ்செய்தியில் உள்ள லிங்கை கிளிக் செய்தவுடன் செல்போனில் டவுன்லோடு ஆகிறது.
பிறகு வாட்ஸ் அப் மூலமாகவோ அல்லது டெலிகிராம் மூலமாகவோ மோசடி நபர்கள் பொதுமக்களுக்கு அடுத்தடுத்து அறிவுரைகள் கொடுத்து குறிப்பிட்ட ஆப் மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று அதற்கான வழிமறைகளை சொல்லி கொடுக்கிறார்கள்.
அவர்கள் கூறியடி அந்த ஆப் இணைந்தவுடன் ஒரு போனஸ் தொகை ரூ.101 பயனாளியின் கணக்கிற்கு வந்துள்ளதாக அந்த ஆப் காட்டும். அடுத்து மோசடி நபர்கள் பயனாளியை அந்த ஆப்பிலிருந்து ஒரு பொருளை வாங்கி விற்குமாறு கூறுவார்கள்.
அதற்கான, கமிஷன் தொகை பயனாளிக்கு கிடைக்கும் என்று கூறுவார்கள். அவ்வாறு பொருளை வாங்குவதற்கு மக்கள் தங்கள் வங்கி கணக்கிலிருந்து மோசடி நபர் கூறுகின்ற வங்கி கணக்கிற்கு பணம் அனுப்ப வேண்டும். ஆனால் பொருளை விற்ற பிறகு கிடைக்கின்ற பணம் மற்றும் கமிஷன் தொகை பயனாளியின் வங்கி கணக்கிற்கு வருவதில்லை.
அதற்கு மாறாக அந்த ஆப்பில் பணம் உள்ளதாக காட்டும். அப்படி அந்த ஆப்பில் காட்டும் பணத்தை எடுக்க பயனாளிகள் தங்களது வங்கி கணக்கை இணைக்கும் போது மோசடி நபர்கள் பயனாளிகள் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து மோசடியில் ஈடுபடுகின்றனர்.
எனவே, தற்போது ‘HONEY’ மற்றும் ‘MAKING’ என்ற பெயரில் உள்ள ஆப்களை மக்களிடம் பயன்பாட்டில் மோசடி நபர்கள் விட்டு அதன் மூலம் பணத்தை மோசடி செய்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் இதுபோன்ற ஆப்புகளை செல்போனில் டவுன் லோட் செய்ய வேண்டாம்.