பனாரஸ் ஹிந்து பல்கலை.,யில் தமிழ்ப் படிப்புகள் ஆய்வுகள் தொடர்பாக பாரதியார் பெயரில் தமிழ் ஆய்வு இருக்கை அமைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
குஜராத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்புகளுக்கான தொழிற்பயிற்சி அளிக்க ‛சர்தார் பவனை’ பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் முறையில் தொடங்கிவைத்துப் பேசினார்.
அவரது பேச்சில், செப்டம்பர் மாதம் 11ம் தேதி குறித்த வரலாற்றுத் தகவல்களை நினைவு கூர்ந்தார். மேலும் அவர் பேசிய போது, சர்தார் வல்லபபாய் படேல் இந்தியாவின் பெருமையாக உள்ளார். செப்.11 வரலாற்றில் நினைவு கூரத்தக்க நாள். மனித நேயத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நாள் அது. அதேநேரத்தில் நமக்கு மனித நேயம் குறித்தும் பாடம் கற்பிக்கப்பட்டது.
செப்.11 மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதே நாளில் தான் சிகாகோ நகரில் மனிதநேயத்தின் பண்புகள் குறித்து சுவாமி விவேகானந்தர் பேசினார்… என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, மறைமுகமாக இதே செப். 11ல் தான் அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் நடத்தப் பட்டது குறித்தும் குறிப்பிட்டார்.
இன்று தேசியக்கவி, மகாகவி, அமரகவி சுப்பிரமணிய பாரதியின் நூறாவது நினைவு நாள் என்பதால், பாரதியின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் ஓர் அறிவிப்பையும் செய்தார் பிரதமர் மோடி.
தமிழ் ஆராய்ச்சியாளர்கள், மாணவர்களுக்காக தமிழ் படிப்புகள் தொடர்பாக பனாரஸ் ஹிந்து பல்கலைக் கழகத்தில் சுப்ரமணிய பாரதி பெயரில் தமிழ் ஆய்வு இருக்கை அமைக்கப்படும் என்று அறிவித்தார் பிரதமர் மோடி. அப்போது அவர், உலகின் மிகப் பழைமையான மொழியான தமிழ் மொழி, நமது இந்தியத் திருநாட்டின் பாரம்பரிய மொழி என்பதில் நாம் பெருமிதம் கொள்வோம் என்று குறிப்பிட்டார்.