சென்னையில் ஓடும் பேருந்தில் உடல் நலக்குறைவால் மயங்கி சரிந்த டிரைவரை, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உயிரை காப்பாற்றியுள்ளார்
நேற்று (9/9) காலை சென்னையை அடுத்த பூந்தமல்லியில் இருந்து திருவொற்றியூர் நோக்கி 101 என்கிற தடம் எண் கொண்ட மாநகர பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தில் பயணிகள் அதிகம் இருந்தனர். பேருந்தை ஏழுமலை என்கிற ஓட்டுநர் இயக்கிக் கொண்டிருந்தார்.
பேருந்து நியூ ஆவடி சாலை சந்திப்பு அருகே சென்றபோது டிரைவர் ஏழுமலைக்கு தன் உடலில் ஏதோ மாற்றம் நிகழ்வது தெரிந்துள்ளது. கண்கள் கிறுகிறுக்க மயக்கம் வருவதுபோன்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதை உணர்ந்துள்ளார்.
அப்போது பேருந்தை இயக்கிக் கொண்டிருந்தார். சிறு கவனக்குறைவு ஏற்பட்டாலும் பேருந்தில் உள்ளே இருப்பவர்கள் உயிரும், வெளியில் சாலையில் செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் உயிர் போகும் வாய்ப்பு இருப்பதை அவர் அந்த நேரத்தில் உணர்ந்துள்ளார்.
அந்த நேரத்திலும் அவரது மனதுக்குள் தோன்றியது, இனி பேருந்தை இயக்க முடியாது எப்படியாவது பேருந்தை சாலை ஓரம் பாதுகாப்பாக நிறுத்தி விட வேண்டும் என்பதே. உடனடியாக பேருந்தை ஓரமாக நிறுத்தியுள்ளார். அப்போது திடீரென அவர் மயக்கம் வரவே பேருந்தில் அப்படியே மயங்கி சாய்ந்துள்ளார். அதைப்பார்த்து பயணிகள் அலறியுள்ளனர்.
பேருந்தில் இருந்த பயணிகள் செய்வதறியாது திகைத்தனர். சிலர் அவரை எழுப்ப முயன்றுள்ளனர். சிலர் தண்ணிரை முகத்தில் அடித்துள்ளனர். நல்லவேளை நம்மை எல்லாம் காப்பாற்றி விட்டார் என்று சிலர் நெகிழ்ந்துபோய் பாராட்டியுள்ளனர்.
சிலர் 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்துள்ளனர். பேருந்து சாலையோரம் நிற்பதையும், பயணிகள் கூட்டமாக இருப்பதையும் அந்த வழியாக ஜீப்பில் ரோந்து சென்ற போலீஸ் சப் – இன்ஸ்பெக்டர் யாஹியா பார்த்துள்ளார்.
உனடியாக அங்கு சென்று விசாரித்த அவர் ஆம்புலன்ஸ் வர தாமதமானதை அறிந்து ஆம்புலன்ஸுக்கு காத்திருக்காமல் உடனடியாக மயங்கி கிடந்த ஓட்டுநர் ஏழுமலையை தனது ஜீப்பில் ஏற்றியுள்ளார்.
பின்னர் போலீஸ் சைரனை ஒலிக்க விட்டப்படி வேக வேகமாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு ஏழுமலையை அழைத்துச் சென்றுள்ளார். உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஏழுமலைக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
சரியான நேரத்தில் அழைத்து வரப்பட்டதால் ஏழுமலை உயிர் பிழைத்தார், தொடர்ந்து மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். குறித்த நேரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் யாஹியா, மருத்துவமனையில் கொண்டு சேர்த்ததால் ஏழுமலை உயிர்பிழைத்துள்ளார். சரியான நேரத்தில் சிகிச்சைக்கு அழைத்து வந்ததால் ஏழுமலைக்கு ஆபத்து ஏதும் இல்லை, என்று மருத்துவர்கள் கூறினார்கள்