வனப்பகுதிகளை விட்டு உணவு தேடி வரும் யானைகள் பள்ளத்தில் சிக்கிக்கொள்ளும் சம்பவங்களை நிறைய பார்த்திருப்போம்.
அப்படிப்பட்ட அபாயகரமான சூழ்நிலையில், யானையை வனத்துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு, பல மணிநேரம் போராடி மீட்பார்கள். ஆனால் மேற்கு வங்கத்தில் வனத்துறையினர் ஒன்றிணைந்து இயற்பியல் தத்துவத்தின் துணையுடன் பள்ளத்தில் விழுந்த யானையை மீட்டுள்ள வீடியோ ஒன்று, பரவலாக பகிரப்பட்டு பாராட்டுக்களை குவித்து வருகிறது.
மேற்கு வங்க மாநிலத்தின் மிதினாபுரத்தில் யானை குட்டி ஒன்று பள்ளத்தில் விழுந்து சிக்கித் தவித்தது. இதுபற்றி வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
டி.எப்.ஓ சந்தீப் பெர்வால் தலைமையிலான குழு உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, மீட்பு பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்தனர். வழக்கமாக யானையை கயிறு கட்டியோ, பலகைகள், மரத்துண்டுகள் மீது ஏற்றியோ பள்ளத்தில் இருந்து மீட்பது போல் அல்லாமல், புதுவித டெக்னிக் ஒன்றை வனத்துறையினர் பயன்படுத்தி இருப்பது பாராட்டுக்களை குவித்து வருகிறது.
ஐஎப்எஸ் அதிகாரி பிரவீன் கஸ்வான் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், மிதினாபுரத்தில் யானை ஒன்று பள்ளத்தில் விழுந்துவிட்டது. இயற்பியலின் ஆர்க்கிமிடிஸ் கொள்கையைப் பயன்படுத்தி அந்த யானை மீட்கப்பட்டது” என பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், யானை தவறி விழுந்த பள்ளம் முழுவதும் தண்ணீர் நிரப்பப்படுகிறது. யானை மிதக்க ஆரம்பித்ததும், சப்போர்ட்டிற்காக கயிறு கட்டப்பட்டு மேலே இழுக்கப்படுகிறது.
இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. யானையை மீட்கிறேன் என்ற பெயரில் துன்புறுத்தாமல், இயற்பியலை பயன்படுத்தி வனத்துறையினர் மீட்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது பாராட்டுக்களை குவித்து வருகிறது.
ஆர்க்கிமிடிஸ் தத்துவம் “ஒரு திரவத்தில் மூழ்கியிருக்கும் உடலில்செலுத்தப்படும் மேல்நோக்கி மிதக்கும் விசையானது, இடம்பெயர்ந்த திரவத்தின் நிறை மையத்தில் உடல் இடம்பெயர்ந்து மேல்நோக்கிச் செயல்படும் திரவத்தின் எடைக்குச் சமம்.” என்பதாகும்.
அதனை அடிப்படையாக கொண்டே வனத்துறையினர் பள்ளத்தில் தண்ணீரை நிரப்பி, அதன் மேற்பரப்பில் யானை மிதந்து வரும் போது லாவகமாக மீட்டு கவனம் ஈர்த்துள்ளனர்.
பிப்ரவரி 21ம் தேதி நள்ளிரவு 1 மணி அளவில் பள்ளத்தில் விழுந்த யானையை வனத்துறையினர் ஆர்க்கிமிடிஸ் தத்துவத்தை பயன்படுத்தி 4 மணி அளவில் பத்திரமாக மீட்டுள்ளனர்.
அந்த யானை உடனடியாக வனப்பகுதிக்கு திரும்பியதாகவும், தற்போது பாதுகாப்பாக இருப்பதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று வெளியிடப்பட்ட வீடியோ இதுவரை 1.5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் மற்றும் 7 ஆயிரத்து 900க்கு அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது.
வீடியோவை பார்க்கும் பலரும் மனிதநேயம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை இதுபோன்ற வீடியோக்கள் தான் நிரூபிப்பதாகவும்,யானை மீட்ட வனத்துறையினருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
Another day, another pachyderm get into trouble on 21/02/2022 at 1am in #Medinipur, no issue @WbdfSocial #Forest dept. Dedicated to serve… few lessons of #swimming and learning about #buoyancy, the #Elephant was #rescued and guided safely into #FOREST by 4am. Thanks to all.. pic.twitter.com/ahQi0NgQgP
— sandeepberwal@IFS (@sandeepberwal) February 21, 2022