உலக மகளிர் தினத்தையொட்டி காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் இன்று சுற்றுலாப் பயணிகள் புராதன சின்னங்களை இலவசமாக கண்டு களிக்கலாம் என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
உலக மகளிர் தினம் ஆண்டுதோறும் மார்ச் 8ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பெண்களின் சாதனைகளை போற்றும் வகையில் அரசு சார்பிலும், தனியார் அமைப்புகள் சார்பிலும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இதனிடையே, பல்வேறு துறைகளில் சாதித்த 29 பெண்களுக்கு ஜனாதிபதி இன்று விருது வழங்கி கவுரவிக்க உள்ளார். அவர்களுடன் பிரதமர் மோடி உரையாடினார்.
இந்நிலையில், தமிழகத்தின் மிக முக்கியமான மற்றும் வரலாற்று சிறப்பு வாய்ந்த சுற்றுலா தளமான மாமல்லபுரத்தில், இன்று பெண்கள் தினத்தை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகள் புராதன சின்னங்களை கட்டணமின்றி இலவசமாக கண்டு களிக்கலாம் என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
அதன்படி வெண்ணை உருண்டை பாறை, அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதம் கடற்கரை கோயில் உள்ளிட்ட புராதன சின்னங்களை இன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நுழைவு கட்டணமின்றி சுற்றுலாப் பயணிகள் இலவசமாக கண்டு ரசிக்கலாம்.
மாமல்லபுரத்தில் வழக்கமாக உள்நாட்டு பயணிகளுக்கு 40 ரூபாயும், வெளிநாட்டு பயணிகளுக்கு 600 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருவது நினைவில் கொள்ளத்தக்கது.