மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஒருவருக்கு புதிய வகை ‘ஓமைக்ரான் XE’ பாதிப்பு இருப்பது உறுதியானது.
மும்பையில் ஓமைக்ரான் XE என்ற புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. ஓமைக்ரான் XE என்ற புதிய வகை வைரசால் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
எக்ஸ்இ மாறுபாடு சமீபத்தில் இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மும்பை குடிமை அமைப்பின் சமீபத்திய செரோ கணக்கெடுப்பு அறிக்கையில், எக்ஸ்இ வகையால் ஒருவரும், கப்பா மாறுபாட்டால் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
செரோ சர்வேக்கு மாதிரிகள் அனுப்பப்பட்ட 230 நோயாளிகளில், 21 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும், அனுமதிக்கப்பட்ட யாருக்கும் ஆக்ஸிஜன் ஆதரவு அல்லது தீவிர சிகிச்சை தேவையாக இருக்கவில்லை என்று அறிக்கை கூறியது.
மகாராஷ்டிராவில் இருந்து பரிசோதிக்கப்பட்ட 376 மாதிரிகளில் 230 பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள். மரபணு வரிசைமுறை ஆய்வகத்தில் இது 11வது தொகுதி சோதனை ஆகும்.
230 மாதிரிகளில், 228 பேருக்கு ஓமிக்ரான் தொற்றும், மீதமுள்ள இருவரில் ஒருவருக்கு கப்பா மாறுபாடும் ஒருவருக்கு XE வகையும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அறிக்கையின்படி, வைரஸின் புதிய விகாரங்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் நிலை மோசமாக இல்லை.
உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, கோவிட்-19 இன் புதிய ‘XE’ மாறுபாடு ஓமிக்ரானின் பிஏ.2 துணை மாறுபாட்டை விட 10 சதவீதம் அதிகமாக பரவக்கூடியதாகத் தெரிகிறது.
தற்போது வரை ஓமிக்ரானின் பிஏ.2 துணை மாறுபாடு அதிக அளவில் பரவக்கூடிய கொரோனா வைரஸின் விகாரமாக கருதப்பட்டதால் இது குறிப்பிடத்தக்கது.
தற்போது, ஓமிக்ரானின் பிஏ.2 துணை மாறுபாடு உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பரவி வருகிறது. ஒமிக்ரானின் மாறுபாடடைந்த XE வைரஸ் தொற்று
இங்கிலாந்து, சீனா, ஹாங்காங், தாய்லாந்து ஆகிய நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் அடி எடுத்து வைத்துள்ளது.
அமெரிக்காவில் பதிவாகும் பெரும்பாலான புதிய கோவிட்-19 நோய்த்தொற்றுகளுக்குப் பின்னால் இந்த மாறுபாடு உள்ளது என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
சீனாவில் பரவி வரும் புதிய வகை ஓமைக்ரான் பாதிப்பு மும்பையில் ஒருவருக்கு உறுதியானது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.