இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் டிக்டாக் வீடியோக்களை அதிகம் பகிர்ந்து வருகின்றனர். யூசர்கள் சொந்தமாக யோசிக்காமல் மற்றவர்கள் செய்யும் வீடியோக்களை அப்படியே பகிர்கின்றனர்.
இதனைத் தடுத்து யூசர்கள் சொந்தமாக யோசித்து புதிய கன்டென்டுகளை பதிவு செய்பவர்களை ஊக்கப்படுத்த இன்ஸ்டாகிராம் முடிவெடுத்துள்ளது.
அதற்காக அல்காரிதமை மாற்றியமைத்துள்ள இன்ஸ்டாகிராம் புதிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம் நிர்வாக இயக்குநர் மொஸ்ஸெரி பேசும்போது, மற்றவர்களின் கன்டென்டுகளை ஷேர் செய்வதைக் காட்டிலும், உண்மையான கன்டென்டுகளுக்கு மதிப்பளிக்க முடிவு செய்திருகிறோம்.
அவர்களின் கன்டென்டுகளுக்காக உங்களுக்கு கிடைக்கும் கிரெட்டிட்டைவிட, உங்களின் உண்மையான கன்டென்டுகளுக்கு அதிக கிரெடிட் கிடைக்கும். மறுபகிர்வு செய்யும் வீடியோக்களை குறைத்துக் கொள்ளுங்கள் எனத் தெரிவித்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் ரீல்ஸூக்கு போட்டியாக பார்க்கப்படும் டிக்டாக் செயலி வீடியோக்களை பகிர வேண்டாம் என வெளிப்படையாக கூறாமல் மறைமுகமாக அவர் இவ்வாறு கூறியிருப்பதாக பார்க்கப்படுகிறது.
இவைதவிர தாங்கள் பதிவிடும் பதிவுகளுக்கு ஏற்ப கீவேர்ட்ஸ்களையும் யூசர்கள் பதிவிட்டுக் கொள்ள முடியும். மேலும், ஏற்கனவே இருக்கும் கீ வேர்ட்ஸ்களையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
பேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான இன்ஸ்டாகிராம், டிக்டாக்கிற்கு போட்டியாக இன்ஸ்டாகிராம் ரீல்ஸைக் கொண்டு வந்தது. பின்னர், அதனை டிக்டாக் செயலிக்கு ஏற்ப நாளுக்கு நாள் மேம்படுத்தி வருகிறது.
இப்போது அடுத்தகட்டமாக இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களில் டிக்டாக் வீடியோக்களை பகிர்வதை தடுக்க முடிவு செய்துள்ளது.
இதன்மூலம் இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் சொந்தமாக கன்டென்டுகளை உருவாக்கும் யூசர்கள் அதிகரிப்பதுடன், டிக்டாக் யூசர்களின் பயன்பாட்டையும் குறைக்க முடியும் என இன்ஸ்டாகிராம் முடிவு செய்துள்ளது.