ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் ஊழியர் ஒருவரை கோயில் கணக்காளர் காலால் எட்டி உதைக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மல்லபுரம் தெருவை சேர்ந்தவர் கர்ணன், 40. ஆண்டாள் கோயிலில் காவலராக பணியாற்றி வருகிறார்.
இவரை கோயில் செயல் அலுவலர் அலுவலகத்தில் வைத்து, உடன் பணியாற்றும் கணக்காளர் சுப்பையா காலால் எட்டி உதைக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. இது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து கோயில் ஊழியர்கள் கூறுகையில், ‘கடந்த மாதம் கோயிலுக்கு அறநிலையத்துறை அமைச்சர், அதிகாரிகள் வருகை எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்காக செயல் அலுவலர் அறையில் கூடுதல் நாற்காலிகளை கர்ணன் எடுத்துச் செல்லும்போது சுப்பையா காலால் எட்டி உதைத்துள்ளார்,’என்றனர்.
கணக்காளர் சுப்பையா கூறுகையில், ”நானும் கர்ணனும் தந்தை, மகன் போன்ற நட்பு உள்ளவர்கள். நான் விளையாட்டுத்தனமாக செய்தது, தற்போது பிரச்னைக்குள்ளாகி உள்ளது,”என்றார்.
கர்ணன் கூறியதாவது, ”இச்சம்பவம் நடந்து பல நாட்கள் ஆகிவிட்டது. கணக்காளர் சுப்பையா என்னை காலால் எட்டி உதைத்தது உண்மை. அது எனக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியது.
தற்போது நான் மருத்துவ சிகிச்சை பெற்று விடுப்பில் ஓய்வெடுத்து வருகிறேன். அவரை பிடிக்காதவர்கள் வீடியோ வெளியிட்டிருக்கலாம். வீடியோ வெளியானதும் வேதனை அதிகமாகியுள்ளது. நான் புகார் எதுவும் தெரிவிக்கவில்லை,” என்றார்.