திருப்பூரில் நாளை வைகோ போராட்டம் நடத்தும் அதே இடத்தில் பாரத பிரதமர் மோடியை வரவேற்று இந்து முன்னணி காவிக்கொடி காட்டி வரவேற்பு அளிக்கப் படும் என்று கூறியுள்ளார் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன்!
முன்னதாக, திருப்பூர் வரும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கறுப்புக் கொடி காட்டுவோம் என்று மதிமுக., பொதுச் செயலர் வைகோ அறிவித்திருந்தார். ஏற்கெனவே மதுரை கூட்டத்துக்கு மோடி வந்திருந்த போது கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்பைத் தெரிவித்திருந்தார் வைகோ. இந்நிலையில் வைகோவுக்குப் போட்டியாக, அதே இடத்தில் காவிக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது இந்துமுன்னணி!
இதனிடையே, திருப்பூர் – பெருமாநல்லூர் பகுதியில் பிரதமர் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகள் விழா ஏற்பாட்டினை கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இன்று பார்வையிட்டார்.
திருப்பூருக்கு வருகை தரும் பிரதமர் மோடி, சென்னை டிஎம்எஸ் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான மெட்ரோ ரயில் சேவையை காணொளிக் காட்சி மூலம் திறந்து வைக்கிறார். பிரதமர் மோடியுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து இந்த ரயில் சேவையை நாளை தொடங்கி வைக்கின்றார். நாளை பிற்பகல் 3.15 மணிக்கு திருப்பூரில் இருந்து காணொளி காட்சி மூலம் இருவரும் மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைக்கின்றனர்.
அதேநேரத்தில் சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடைபெறும் தொடக்க விழாவில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் பங்கேற்கிறார்.