ஏதோ காந்தாரி அம்மன் சாந்த சொரூபிணி … அதனால் காப்பாற்றி விட்டாள்… என்கிறார்கள் திருவனந்தை நகர் மக்கள்.
திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் சசிதரூர், கோயிலில் திடீர் சிக்கலில் சிக்கினார்.
நேற்று தமிழ்ப்புத்தாண்டு! மலையாளிகளுக்கு இன்று புத்தாண்டு ஆரம்பம்.
விஷூ பண்டிகையான இன்று திருவனந்தபுரம் காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூர் காந்தாரி அம்மனுக்கு துலாபாரமாக வாழைப்பழம் கொடுப்பதற்காக தராசில் அமர்ந்தார்.
வாழைப்பழம் தராசுத் தட்டில் வைக்கப்பட்ட போது திடீரென தராசு சங்கிலி அறுந்து விழ, கீழே விழுந்த சசிதருக்கு தலையில் அடி; ரத்தம் வழிய, உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப் பட்டார். அங்கே தலையில், 11 தையல் போடப்பட்டு வீடு திரும்பினார்.
இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டு, சசிதரூருக்கு விஷூ கைநீட்டம் சரியாக அமையவில்லையே என்று கலாய்க்கிறார்கள் திருவனந்தபுரம் நகர் மக்கள்!
மூன்றாவது முறையாக எம்பி தேர்தலில் நிற்கும் சஷி தரூர் திருவனந்தபுரம், தம்பானூர் காந்தாரி அம்மன் கோவிலில் துலாபார நேர்ச்சை கொடுத்தபோது சஷியின் பாவ பாரம் தாங்காமல் தராசு அறுந்து விழுந்து தலையில் காயம் ஏற்பட்டது என்று உள்ளூர் சேனல் ஒன்றில் செய்தி வெளியானது.
“த கிரேட் இந்தியன் நாவல்” என்ற புத்தகத்தில் ஹிந்து மத பெண்கள் குறிப்பாக நாயர் சமுதாய பெண்களை குறித்து அவர் எழுதியிருந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அந்த நாவலில், தன் மனைவியின் அறைமுன் மற்றொருவரின் செருப்பைக் கண்டால் அந்தக் கணவன் தன் வாய்ப்பு எப்போது வரும் என்று காத்துக் கொண்டிருக்கும் நிலை இருந்தது என எழுதியிருந்தார். இதற்கு நாயர் சமூகத்தில் இருந்து கடும் கண்டனங்கள் வலுத்து வந்தன.
மிக சமீபத்தில் சபரிமலை பிரச்னையின் போது இவர் திருவாய் மலர்ந்தது …. ஹிந்துப் பெண்களுக்கு ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம் நோய் ( கடத்திச் சென்றவன் மீதே காதல் வயப்படுவது) பீடித்துள்ளது எனக் கூறியிருந்தார்.
சசிதரூரின் சொந்த வாழ்க்கையும் கறை படிந்ததுதான்! அதுவும் பெண்கள் கறை படிந்ததுதான். பாகிஸ்தான் பத்திரிகையாளர் பெண் மீதான நெருக்கமான நட்பினால், அப்போதைய மனைவி சுனந்தா புஷ்கருடன் தகராறு ஏற்பட்டது.. டிவிட்டர் பதிவில் இருவரும் சரமாரியாக திட்டிக் கொண்டார்கள். அவர்களின் சண்டை பெரிதானது. பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் சசிதரூருக்கு இருக்கும் ஏதோ சில ரகசியங்களை சுனந்த புஷ்கர் தன்னுள் வைத்திருந்தார் என்ற சந்தேக நிழல் படர்ந்த போது, திடீரென சுனந்தா புஷ்கரின் மரணம் நிகழ்ந்தது. அந்த மரணத்தின் சந்தேக நிழல் சசிதரூர் மீது விழுந்தது. இதற்காக விசாரணைக்கெல்லாம் முன் நின்றார்.
காந்தாரி அம்மனும் பெண்தானே, அதனால்தான் தன் சந்நிதிக்கே வர வைத்து தண்டனையைக் கொடுத்துவிட்டாள். இருப்பினும், அவள் கோபாக்னி கொண்டவளாக இல்லாமல், சசி தரூரின் பாவ மூட்டையை சுமக்க முடியாமல் துலாபாரத்தை மட்டும் அறுந்து விழச் செய்து, அந்தப் பரிகாரத்தைத் தான் ஏற்றுக் கொள்ளாமல் லேசான அடியுடன் நிறுத்திக் கொண்டாள் என்று செண்டிமெண்ட் டச் கருத்துகளை முன்வைக்கிறார்கள் திருவனந்தபுரம் நகர்வாசிகள்!
செண்டிமெண்ட் நிறைந்த ஊரில் இதையும் முடிச்சுப்போட்டு பார்ப்பது ஒன்றும் புதிதில்லைதான்! சமுதாய ஓட்டுக்கள் சபரிமலை ஐயன் கருணையால் இந்த முறை இவர்களுக்கு இல்லை என்றும், அதிகாரத்தை வைத்து சபரிமலை ஐயனுக்கு அநீதி செய்யும்போது காங்கிரஸ் கண்டுகொள்ளவே இல்லை என்பதும், எனவே, இம்முறை இந்துமத விசுவாசிகளின் ஓட்டு கும்மனத்துக்குப் போவதால், சசிதரூர் பார்டரை தாண்டுவது கடினம் என்றும் கிசுகிசுக்கிறார்கள் தொகுதிவாசிகள்!
இருப்பினும், தன்னை ஏதோ ஹெவி வெய்ட் பொலிடிசியன் என்று, தன்னை கனத்த அரசியல்வாதி என்று கோயில்களில் அழைத்துக் கொள்ளலாம் என்று மீண்டும் கிண்டல் அடித்து சர்ச்சையில் மாட்டிக் கொண்டிருக்கிறார் சசிதரூர். அவரது டிவிட்டர் பதிவில் இதனை அவர் வெளிப்படுத்திய விதம் பலரும் முகம் சுளிக்க வைத்துள்ளது. துலா பாரம் என்பதே, தனது கர்வத்தை துடைத்தெறிந்து, இறைவனின் கருணையை பெரிதாக நினைப்பதுதான்! ஆனால் இவரோ, தன்னை ஹெவி வெய்ட் சாம்பியன் போல், கருதிக் கொண்டு கருத்து பதிவிட்டிருக்கிறார் என்று கோபத்துடன் கருத்து தெரிவிக்கின்றனர் பலர்.
Started my paryadanam of Kazhakoottam yesterday on a unique note – with a ‘thulabharam’ of bananas! At least in temples I can claim to be a “heavyweight politician”! pic.twitter.com/vR4ytAsI4v
— Shashi Tharoor (@ShashiTharoor) April 11, 2019