சிவபெருமானின் 64 மூர்த்தங்களில் 54 வது மூர்த்தமான சகக்ர தான மூர்த்தி!
குபன் என்றும் மன்னன் முன்னொரு சமயம் உலகம் முழுவதையும் ஒரேக் கொடியின் கீழ் ஆட்சி புரிந்து வந்தான். அவன் பொருட்டு திருமால் ததீசி எனும் முனிவரை எதிர்த்து யுத்தம் செய்தார். அவ்வாறு யுத்தம் நடைபெறும்போது திருமாலால் தாக்குப் பிடிக்க இயலா நிலை வந்தது.
உடன் தனது சக்கராயுதத்தை அம் முனியின் மேல் ஏவினார் ! ஆனால் அது அம் முனிவர் தன் வச்சிரக் கையால் தாக்கிட அது திரும்பவும் திருமாலிடமே வந்து சரணடைந்தது. உடன் திருமால் தன்னைப்போல் இன்னொரு உருவத்தைப் படைத்தார்.
ஆனாலும் விடாமல் அம் முனிவரும் தனது பாதக் கட்டை விரலை அசைக்க எண்ணற்ற திருமால்கள் தோன்றினர். உடனே திருமாலுக்கு புரிந்தது. இம் முனிவர் தம்மைவிட தவ வலிமை அதிகம் பெற்றவர் ; எனவே இவரை எதிர்க்க முடியாது!
சிவபெருமானின் ஆயுதத்தால் தான் முடியும் என்று சென்றார். இந்த சக்கராயுதம் திருமாலிடம் வந்தக் கதை எப்படியெனில் ஒரு சமயம் உலகம் முழுதும் அழிந்தது, அப்போது மீண்டுமொரு புதிய உலகைப் படைக்க எண்ணினார் பரமசிவம் !
எனவே பிரமனையும், திருமாலையும் உண்டாக்கினார். அவர்களிடம் படைத்தல் மற்றும் காத்தல் தொழிலை ஒப்புவித்தார். உடனே காத்தல் தொழிலுக்கென ஆயுதம் வேண்டினார் திருமால் ! சிவபெருமான் தனது முக் கண்களால் சூரிய, சந்திர ஒளியைக் கொண்டு கதை ஒன்றும், சக்கரம் ஒன்றும் உருவாக்கிக் கொடுத்தார். உடன் பார்வதி தன் பங்கிற்குத் தனது முகத்தினால் ஒரு சங்கும் கண்களால் பத்மமும் உருவாக்கி அவற்றைத் தாங்குவதற்கு இரு கரங்களையும் உருவாக்கித் திருமாலுக்குக் கொடுத்தார்.
அத்தகைய சக்கராயுதம் தோற்றதை நினைத்தவுடன் திருமாலுக்கு என்ன செய்வதென தெரியவில்லை. உடனே தேவர்களிடம் சொல்லி, சலந்தரனைக் கொல்ல உருவாக்கிய சுதர்சனம் என்ற ஆயுதத்தை சிவபெருமானிடம் இருந்து பெற தவம் செய்யப் போவதாகக் கூறினார். அவ்வாறே கடுமையான தவமிருந்தார். தினந்தோறும் ஆயிரம் தாமரைகளால் சிவபெருமானை பூஜித்தார்.
ஒருநாள் சிவபெருமான் ஒரு மலரை ஒளிய வைத்தார். பூஜை செய்து வந்தத் திருமால் ஒரு மலர் இல்லாததைக் கண்டு வருந்தி தனது கண்களில் வலக் கண்ணைப் பிடுங்கி சிவ பெருமான் திருவடியில் வைத்துத் தனது பூஜையை முடித்தார். இதனைக் கண்டு மனம் மகிழ்ந்த சிவபெருமான் அவரை கமலக் கண்ணன் என்றழைத்தார்.
பின் அவரது விருப்பப்படி சுதர்சனத்தைக் கொடுத்தார். இத்தகைய யாரையும் எதிர்க்க வல்ல சுதர்சனத்தை, திருமாலின் சிவபக்திக்காகக் கொடுத்ததால் சிவபெருமானுக்கு சக்கர தான மூர்த்தி எனப் பெயர் ஏற்பட்டது.
இந்தப் புனித வரலாறு வைகை ஆற்றினை எதிர்த்துச் சென்ற ,திரு ஞான சம்பந்தர் “” வாழ்க அந்தணர் “” என எடுத்துப் பாடிய திருப் பாசுரத்தில் ஒன்பதாவது பாடலாக இடம் பெற்றுள்ளது !
” பாராழி வட்டம் பகையால் நலிந்து ஆட்ட வாடிப்
பேர் ஆழியானது இடர் கண்டு அருள் செய்தல் பேணி
நீர் ஆழி விட்டு ஏறி நெஞ்சு இடம் கொண்டவருக்குப்
போர் ஆழி ஈந்த புகழும் புகழ் உற்றதன்றே”!
புராண வரலாறுகளின் மெய்த் தன்மையை உணர்த்த வேறு சான்றும் வேண்டுமோ ?
திருமுறைகளில் பலராலும் இவ் வரலாற்று நிகழ்வு போற்றிப் பாடப் பட்டுள்ளது !
திருச்சிற்றம்பலம்