மகா பெரியவர் பண்டரி சேத்ராடனம் செய்தபோது விட்டலனை கூட தரிசிக்காமல் முதலில் நேராக சென்று இந்த பாதுகையை தரிசித்து தன் தலை மேல் வைத்து கொண்டாராம் பிறகே விட்டல தர்சனம் செய்தாராம் அப்பேர்பட்ட விட்டலன் பாதுகை பண்டரியில் உள்ளது இன்றும் நாம் சென்றால் சேவிக்கலாம் மஹாத்வாரத்திலிருந்து.. அப்ரதக்ஷிணமாக இரண்டு நிமிடங்கள் நடந்தால் ஒரு சிறிய தெரு வருகிறது. நெளிந்தும் வளைந்தும் செல்லும் மிகக்குறுகிய அந்த வீதியில் இருக்கிறது கால்யாசாவாடா.
இதன் பெயர்க்காரணம் தெரியவில்லை.
இவ்விடத்தில் பகவான் பாண்டுரங்கனின் பாதுகைகள் உள்ளன… இதில் என்ன சிறப்பு? எல்லாக் கோவில்களிலும் இருப்பதுதானே என்று தோன்றலாம்.
அவ்வாறன்றி இந்தப் பாதுகைகளுக்கு ஒரு பெரிய சிறப்பு இருக்கிறது. பல தலைமுறைகளுக்கு முன்னால் அந்த வீட்டைச் சேர்ந்த ஒருவர் (லக்ஷ்மணன் என்று சொல்கிறார்கள்) பகவான் பாண்டுரங்கனைக் காண்பதற்காக அழுதுகொண்டே இருந்தார்.
கடும் கோடையில் சந்திரபாகாவின் சுடுமணலில் படுத்து விட்டலா விட்டலா என்று கதறுவார். கடுங்குளிர் வீசும் காலங்களில் சந்திரபாகையின் நீருக்குள் நின்றுகொண்டு விட்டல நாமத்தைச் சொல்லி அழுதழுது அவன் தரிசனத்திற்காக ஏங்கித் தவித்தார். இப்படிப் பல நாட்கள் சென்றன.
பகவத் தரிசனத்திற்காக அழும் அவருக்காக மனமிரங்கினான் தேவாதி தேவனான விட்டலன் கோடி சூர்யன் ஒன்றாய் உதித்ததுபோல் சங்கு சக்கர கதா பத்ம சோபேயுடன் மகர குண்டலம் சிரசில் சூரியனையும் மங்க செய்யும் மகுடமும் கழுத்தில் கெளஸ்துபம் வைஜயந்தி மாலை புரள கண்ணெதிரே தோன்றினான் மகா க்ருபாகரனான பாண்டு ரங்கன்.
யாருக்குக் காட்சி கொடுத்தாலும் என்ன வரம் வேண்டும்? என்று கேட்பது பகவானின் பழக்கதோஷம்.
உண்மையில் அனைத்துக்கும் முதலும் இறுதியுமான பகவானையே கண்டபின் ஒருவனுக்கு மற்ற பொருள்களால் ஆகவேண்டியது என்ன?
உன் நினைவு எப்போதும் வேண்டும், ஸத்சங்கம் வேண்டும், உன் அடியாரின் தொடர்பு வேண்டும் என்று பல பக்தர்கள் கேட்பதைப் பார்க்கிறோம். மிக அபூர்வமாக சிலர், குழந்தைப் பேறு, மற்றும் மற்ற செல்வங்களை வேண்டுகின்றனர்.
இந்த பண்டரி பக்தர் என்ன கேட்டார் தெரியுமா?
விட்டலா, மின்னல் போல் நீ தோன்றி மறைந்துவிடுகிறாய். உன்னை எப்போதும் என்னுடன் இருக்க வைக்க இயலாது. ஆனால், நீ எனக்குக் காட்சி கொடுத்ததன் அடையாளமாக உன் பாதுகைகளைக் கழற்றிக் கொடு. நான் ஆராதனை செய்கிறேன்.
இந்தக் கலியுகத்திலும் உன் பெயர் சொல்லி உண்மையாக அழைப்பவர்க்கு நீ தரிசனம் தருகிறாய் என்பதற்கு இந்தப் பாதுகைகள் சாட்சி சொல்லட்டும் என்றார்.
இன்றும் அவரது ஏழாவது தலைமுறையினர் அவ்வீட்டில் பகவானின் பாதுகைகளை ஆராதனை செய்து வருகின்றனர்.
நமக்கு நம்பிக்கை ஏற்படுத்துவதில், நம்மை நன்னெறிக்குய்ப்பதில், நமது முன்னோர்களுக்குத்தான் எவ்வளவு அக்கறை!!
தவத்திற்கிரங்கி காட்சி கொடுக்க வந்த பகவானின் பாதுகைகளைப் பார்த்ததும் இன்னும் நிறைய நாமம் சொல்ல சொல்ல நாமும் இறைவனைக் காணலாம் என்ற நம்பிக்கை உறுதிப்படுகிறது.