“ஒரு ஊருக்கு ஒரே ஒருத்தர் சுயநலமா இல்லாம
இருந்தாலும் போதும்.அந்த ஊர்ல நல்ல மழை பெய்யும்னு
திருவள்ளுவரே சொல்லி இருக்கார்.”-பெரியவா
(ஊரில் யாருக்கும் ஒரு சொட்டுத்தண்ணீர் கூட
தர விரும்பாதவராக கிணற்றைச் சுற்றி வேலி
போட்டுக்கொண்ட ஒரு செல்வந்தனுக்கு அறிவுரை)
கட்டுரை ஆசிரியர்-இந்திரா சௌந்தர்ராஜன்.
புத்தகம் மகாபெரியவர் பாகம்-1 ..(47)
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
பெரியவா யாத்திரையின் போது திருக்கோவிலூர் அருகில்
ஒரு ஊரில் தங்க நேர்ந்தது.அந்த சமயத்தில் மழை பொய்த்து
போய் அந்த ஊரே குடிக்கக்கூட தண்ணீர் இல்லாமல்
தவித்துக் கொண்டிருந்தது.
ஆனாலும் ஒரு செல்வந்தரின் வயக்காட்டிலும் அங்குள்ள
கிணற்றிலும் தண்ணீர் வற்றாமல் சுரந்தபடி இருந்தது.அந்த
செல்வந்தரோ ஊரில் யாருக்கும் ஒரு சொட்டுத்தண்ணீர் கூட
தர விரும்பாதவராக கிணற்றைச் சுற்றி வேலி
போட்டுக்கொண்டு விட்டார்.
இதனால் ஊரிலுள்ளோர் நெடுந்தூரம் போய் கிடைக்கிற
இடத்தில் தண்ணீர் கொண்டுவந்து நாட்களைக் கடத்திக்
கொண்டிருந்தனர்.
பெரியவர் வந்து தங்கவும் அவரிடம் மழை பெய்ய வேண்டும்,
எங்கள் குறை நீங்க வேண்டும் என்றும் வேண்டி நின்றனர்.
இந்நிலையில் அந்த செல்வந்தரும் தரிசனம் செய்ய வந்தார்.
வந்த செல்வந்தரிடம் ஒரே புலம்பல்.
“சாமி, என்கிட்ட பணம், காசு இருக்குன்னு பேர்தானே ஒழிய
என்னை யாரும் மதிக்கிறதேயில்லை.ஒரு புழுவைப் பார்க்கிற
மாதிரிதான் பார்க்கிறாங்க.அதனாலேயே என் மனது மாதிரியே
இந்த ஊரும் வறண்டு கிடக்குது” என்றார்.
அதைக்கேட்ட பெரியவரும்,”நான் என்ன செய்ய வேண்டும்?”
என்று திரும்பிக்கேட்டார்.
“உங்களைக் கும்பிட்டா நல்லது நடக்கும்னு எல்லாரும்
பேசிக்கிட்டாங்க,அதான் வந்தேன்.இனி நல்லது நடந்தா சரி..”
என்றார்.
“என்னை கும்பிட்டா மட்டும் நல்லது நடந்துடாது.
நான் சொல்றபடி கேட்டாத்தான் நல்லது நடக்கும்.”
“சொல்லுங்க.என்னால முடிஞ்சா கட்டாயம் கேட்டு
நடந்துக்கிறேன்…”
“உங்களால நிச்சயம் முடியும்.உங்க மனசு வறண்டு
கிடக்கிறதாலதான் ஊரும் வறண்டிருக்குன்னு
சொன்னீங்கதானே?”
“ஆமா சாமி…நான் அப்படித்தான் நினைக்கிறேன்.”
“அப்ப நீங்க சந்தோஷத்துக்கு மாறினா ஊரும்
சந்தோஷமாயிடும்ன்னுதானே அர்த்தம்?”
“ஆனா என்னால ஆகமுடியலையே…என் பேச்சை
எல்லாரும் கேட்டாத்தானே சந்தோஷப்படமுடியும்?”
“நீங்க முதல்ல உங்க கிணத்தைச் சுற்றி போட்டுள்ள
வேலியை எடுத்துடங்க.எல்லாரையும் தண்ணி எடுத்துக்க
அனுமதியுங்க.அப்புறம் பாருங்க…”-பெரியவா
“சாமி, நான் எனக்கு சொந்தமான கிணத்தைத்தானே
பாதுகாப்பாக மூடி வச்சிருக்கேன்.இது எப்படி தப்பாகும்?”
“எதுவும் நமக்கு உண்மைல சொந்தமில்ல..உங்க உடம்பையே
எடுத்துக்குங்க..உயிர் பிரியப்போறவரை இது உங்க கூடதானே
இருக்கப்போகுது..அதனால இது இறப்புக்கு பிற்கு கூட
வந்துட முடியுமா?”-பெரியவா
“இப்படி தத்துவம் பேசினா எப்படி சாமி? இருக்கிற தண்ணியை
நான் தானம் பண்ணிட்டு என் நிலத்துக்கு என்ன செய்வேன்?”
“கல்வியும் தண்ணியும் கொடுக்கக் கொடுக்கத்தான் பெருகும்.
நீங்க ஊர் நல்லா இருக்கட்டும்னு முதல்ல நினைங்க.
பிறகு பாருங்க…”-பெரியவா.
“அப்படி செஞ்சா மழை நல்லா பேஞ்சு பிரச்னை தீர்ந்துடமா?”
“நிச்சயமா..ஒரு ஊருக்கு ஒரே ஒருத்தர் சுயநலமா இல்லாம
இருந்தாலும் போதும்.அந்த ஊர்ல நல்ல மழை பெய்யும்னு
திருவள்ளுவரே சொல்லி இருக்கார்.”-பெரியவா
“சாமி உங்க பேச்சை நான் நம்பலாமா?”
“தாராளமாக நம்புங்க. மனசார எல்லாருக்கும் தண்ணி கொடுங்க
நானும் உங்களுக்காக அந்த ஈஸ்வரன் கிட்ட வேண்டிக்கிறேன்.”
“சரிங்க சாமி, இப்பவே போய் வேலியை எல்லாம் எடுத்துட்டு
யார் வேணா வந்து எவ்வளவு வேணா தண்ணி
எடுத்துக்குங்கன்னு தண்டோரா போட்டுட்றேன்” என்று
கூறிவிட்டு சென்ற செல்வந்தர் அப்படியே நடந்துகொண்டார்.
ஊரார் மனம் குளிர்ந்து போனது. யார் சொன்னாலும் கேட்காத
செல்வந்தர் பெரியவர் சொல்லி கேட்டதை அதிசயமாகக்
கருதினர்.
இத்தனைக்கும்ஊரார் பெரியவரிடம் அந்த செல்வந்தர் பற்றியோ
நீருள்ள கிணறு பற்றியோ ஒரு வார்த்தை கூட கூறவில்லை.
அவ்வளவையும் பெரியவர்தன் ஞானதிருஷ்யாலே தெரிந்து
கொண்டு செயல்பட்டார்.அதன் பிறகு இரண்டு நாளில் அந்த
ஊரில் நல்ல மழை பெய்தது. அந்த செல்வந்தருக்கும் பெரிய
நம்பிக்கையைக் கொடுத்தது.