ஓசூர் அருகே, விஷம் கலந்த குளிர்பானத்தை குடித்த, நான்கு வயது ஆண் குழந்தை உயிரிழந்தது. தற்கொலைக்கு முயன்ற அவரது தாய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அடுத்த அஞ்சலகிரியை சேர்ந்தவர் நாகேந்திரன், 26; இவரது மனைவி சசிகலா, 26; இவர்களுக்கு, ஹர்ஷன், 4, என்ற மகனும், ஸ்ரீஹர்ஷினி என்ற ஒன்றரை வயது பெண் குழந்தையும் இருந்தன.
கடந்த சில மாதங்களுக்கு முன் விபத்தில், நாகேந்திரன் இறந்து விட்டார். கடந்த ஒரு வாரத்துக்கு முன், உடல்நலம் குன்றிய குழந்தை ஸ்ரீஹர்ஷினியும் உயிரிழந்ததால், தாய் சசிகலா மிகவும் மனமுடைந்து காணப்பட்டார்.
இனி, தனக்கு ஆதரவு இல்லை என நினைத்து, கடந்த, 31ல் மாலை குளிர்பானத்தில், எலி மருந்தை கலந்து குடித்து விட்டு, டம்ளரில் சிறிது மீதம் வைத்து, அதை சமையல் அறையில் வைத்துள்ளார்.
அப்போது குடிக்க தண்ணீர் கேட்ட மகன் ஹர்ஷனை, சமையல் அறையில் சென்று குடிக்குமாறு சசிகலா கூறியுள்ளார். குழந்தை ஹர்ஷன், விபரம் அறியாமல், விஷம் கலந்த குளிர்பானத்தை எடுத்து குடித்துள்ளார்.
இந்நிலையில், மயங்கிய நிலையில் கிடந்த குழந்தை மற்றும் தாயை மீட்ட அக்கம் பக்கத்தினர், தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, நேற்று முன்தினம் இரவு குழந்தை ஹர்ஷன் உயிரிழந்தான். தாய் சசிகலாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து உத்தனப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.