அக்னி நட்சத்திர அனல் ஒரு புறம் வாட்டிவதைக்க, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றும் மாலை நேரத்தில் கனமழை பெய்தது. பவானி, பெருந்துறை, கோபி, அந்தியூர் மற்றும் ஈரோடைச் சுற்றியுள்ள பகுதியில் கனமழை பெய்ததால் சற்று குளிர்ச்சியான சூழல் நிலவியது. கோடை வெப்பத்தின் பிடியில் சிக்கித் தவித்த மக்கள் சற்றே ஆறுதல் அடைந்தனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் நெடுஞ்சாலைகளில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டுச் சென்றன.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் சூறைக் காற்றுடன் மிதமான மழை பெய்ததால் மக்கள் குளிர்ச்சியான சூழலை அனுபவித்தனர். வட மற்றும் மேற்கு மாவட்டங்களில் பெரும்பாலும் மழை பெய்தது. இருப்பினும் தென்மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களிலும் வெயில் கொளுத்தி எடுக்கிறது.