வாட்சப்பில் போலி செய்திக்கு ஆப்பு வைக்கப் பட்டுள்ளது. போலி செய்திகளை கண்டறிய புதிய வசதியை இந்தியாவில் அறிமுகம் செய்தது வாட்ஸ்-அப் நிறுவனம்.
‘வாட்ஸ் ஆப்’ மூலம் பரப்பப்படும் தவறான தகவல்களால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. தமிழகத்திலும், வட மாநிலங்களிலும் பரவிய வாட்ஸ் ஆப் தகவல்களை நம்பி, வன்முறை கும்பல்களால் பலர் கொல்லப் பட்ட சம்பவங்கள் நடந்துள்ள்ள.
இந்நிலையில், இத்தகைய மோசமான சம்பவங்களுக்குக் காரணமான பொய்ச் செய்திகளை கண்டறிய வாட்சப் புதிய வசதியை கொண்டு வந்துள்ளது. பயனர்கள் தங்களுக்கு வரும் சந்தேகத்துக்கு இடமான ஒரு செய்தியின் நம்பகத்தன்மையைக் கண்டறிய புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ‘செக்பாயிண்ட் டிப்லைன்’ தொழில்நுட்பத்துக்கு அந்த செய்தியை அனுப்பினால் போதும்.
இதனை 91-9643000888 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். அனுப்பிய தகவல்களை சரிபார்க்கும் மையம், அது உண்மையானதா? பொய்யானதா? சர்ச்சைக்குரியதா? என்ற தகவலை வாடிக்கையாளருக்கு தெரிவிக்கும்.
படங்கள், வீடியோ லிங்க், எழுத்து வடிவம் என பலவகையான செய்திகளை இந்த மையம் ஆய்வு செய்யும்.
முதல்கட்டமாக இந்த சேவை, ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, வங்காளம், மலையாளம் ஆகிய இந்திய மொழிகளில் கிடைக்கிறது. விரைவில் மற்ற மொழிகளிலும் இந்த வசதி மேம்படுத்தப்படும் என வாட்சப் நிறுவனம் அறிவித்துள்ளது.