பிச்சைக்காரனுக்கு சோறு இல்லை என்றாளாம் மருமகள்.. உடனே மாமியார் வந்து.. அதெப்படி சொல்லலாம் .. என்ற வகையில் ஒரு கதையை தனது டிவிட்டர் பதிவில் கொடுத்துள்ளார் மருத்துவர் ராமதாஸ்.
நேற்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை வெளியானது. அதில் ராகுல் காந்திக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கொடுத்த திட்டப்படி, மாதம் ரூ.6ஆயிரம் ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கும் நியாய் திட்டம் போல் பல கவர்ச்சிகரமான , அச்சம் தரக்கூடிய பல அறிவிப்புகள் இருந்தன.
இந்நிலையில் இந்த தேர்தல் அறிக்கை குறித்து கருத்து தெரிவித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், கடந்த 10 வருட ஆட்சியில் செய்ய முடியாததை, தற்போது தேர்தல் அறிக்கையாக காங்கிரஸ் வெளியிட்டுள்ளது என்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய போது குறிப்பிட்டார்.
அது போல், பாமக., நிறுவுனர் டாக்டர் ராமதாஸ் இது பற்றி குறிப்பிட்ட டிவிட்டர் பதிவில் ஒரு சிறுகதையையே சொல்லி மக்களுக்கு விளங்க வைத்திருக்கிறார். குறிப்பாக, அவர் நீட் தேர்வு பற்றிக் குறிப்பிட்டது…
நீட் தேர்வு ரத்து. ஆனால், நுழைவுத் தேர்வு உண்டு: காங். தேர்தல் அறிக்கை -பிச்சைகாரனுக்கு சோறு இல்லை என்றாளாம் மருமகள். அதைக்கேட்ட மாமியார், பிச்சைக்காரனைக் கூப்பிட்டு, ’’அதெப்படி அவள் சொன்னால் நீ கேட்கலாம். இப்போ நான் சொல்கிறேன். சோறு இல்லை நீ போ” என்றாளாம். இதுவும் அப்படித் தான்! – என்று கூறியுள்ளார்.