ஈராக்கில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 80க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் அமெரிக்கா – ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
இதை அடுத்து, சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பதற்றம் குறித்து, இந்தியா உள்ளிட்ட 26 நாடுகள் அவசர ஆலோசனை நடத்தியுள்ளன.
ஈரான் ராணுவத்தின் முக்கிய தளபதியான குவாசிம் சுலைமானியை அமெரிக்க படைகள் ஈராக்கில் கொன்றன. இந்தச் செயலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈரான் உடனடி நடவடிக்கை எடுக்கும் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எதிர்பார்த்திருந்தன.
அதன்படி, பாக்தாத் நகரில் உள்ள அமெரிக்க அல் ஆசாத் விமான படை தளம் மீது ஈரான் அடுத்தடுத்து 9 முறை ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் 80க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இதை அடுத்து, ஈரான் – அமெரிக்கா இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இந்தத் தாக்குதல் குறித்து டுவிட்டரில் பதிவிட்டஅமெரிக்க அதிபர் டிரம்ப், ஆல் இஸ் வெல். 2 அமெரிக்க விமானப்படை தளங்கள் மீது ஈரானில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தற்போது உயிர்ச் சேதம் மற்றும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. பரவாயில்லை. இது நல்லது தான். எங்களிடம் சக்திவாய்ந்த ஆயுதங்கள், ராணுவம் உள்ளது. நாளை காலை இது பற்றி அறிக்கை அளிப்பேன்… என்று தெரிவித்திருக்கிறார்.
இதனிடையே ஈரான் – அமெரிக்கா இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றம் குறித்து, உலக நாடுகள் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றன.
இந்தியா தனது வெளியுறவுத் துறை மூலம் விடுத்த எச்சரிக்கையில், அவசியமின்றி ஈராக் செல்ல வேண்டாம். ஈரான், ஈராக், வளைகுடா நாடுகளுக்கு இந்திய விமானங்கள் செல்ல வேண்டாம். ஈரான் வான்வெளியை பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும் . ஈராக்கில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பயணம் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.