-முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி வெற்றி பெற்றது.
இந்திய ஆண்கள் ஹாக்கி அணி நியூசிலாந்தை 3-2 என்ற கோல் கணக்கில் குரூப் ஏ போட்டியில் வீழ்த்தியது. இந்தியாவுக்காக ஹர்மன்பிரீத் சிங் (26 மற்றும் 33 வது நிமிடங்கள்) இரட்டை கோல் அடித்தார். எட்டு முறை முன்னாள் சாம்பியன் பட்டம் பெற்றுள்ள இந்திய அணிக்கு ரூபீந்தர் பால் சிங் மற்றொரு கோல் அடித்தார்.
நியூசிலாந்தைப் பொறுத்தவரை, கேன் ரஸ்ஸல் (6 வது நிமிடம்), ஸ்டீபன் ஜென்னஸ் (43 வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்தனர்.
இந்திய அணி ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, ஸ்பெயின், ஜப்பான் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுடன் ஏ குரூப்பில் உள்ளது. பெல்ஜியம், நெதர்லாந்து, ஜெர்மனி, கிரேட் பிரிட்டன், கனடா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகியவை குரூப் பி பிரிவில் உள்ளன.
சுஷீலா தேவி ஜூடோ போட்டியில் தோல்வி – ஒலிம்பிக்கிலிருந்து வெளியேறினார்.
பெண்கள் 48 கிலோ ஜூடோவில் சுஷிலா தேவி – 32 போட்டிகள் கொண்ட முதல் சுற்றில் சுஷிலா தேவி தோல்வியுற்று வெளியேறினார். போட்டியில் முதல் இரண்டு நிமிடங்கள் சுஷீலா சென்ற ஒலிம்பிக்கில் மூன்றம் இடம் பிடித்த வீராங்கனை ஹங்கேரிய வீராங்கனை இவா செசனோவிஸ்கியை நங்கு சமாளித்தார். ஆனால் அதன் பின்னர் இவா சுஷீலாவை எளிதில் தோற்கடித்தார்.
ஆண்கள் இலகுரக இரட்டை துடுப்புப் படகுப் போட்டியில் இந்திய இராணுவத்தைச் சேர்ந்த அர்ஜுன் லால், அரவிந்த் சிங் பங்கேற்றனர். இன்றைய முதல் சுற்றுப் போட்டியில் இவர்கள் ஐந்தாம் இடம் பெற்றனர். முதல் இரண்டு இடங்களைப் பிடித்த அயர்லாந்து மற்றும் செக் குடியரசு அணியினர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர். இந்திய அணி அடுத்த சுற்றில் போட்டியிடும். இதிலும் வெற்றி பெற்றால் அவர்கள் காலிறுதிக்கு முன்னேறுவார்கள். இன்றைய போட்டியில் அவர்கள் சிறப்பாக படகு வலித்தார்கள்.
பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் தகுதிப் போட்டி – அபூர்வி சண்டேலா மற்றும் இளவேனில் வாலறிவன் இருவரும் இறுதிச்சுற்றிற்குத் தகுதிபெறவில்லை. முதம் முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இளவேனில் 626.5 புள்ளிகளுடன் 16ஆவது இடத்தையும் அனுபவ வீரரான அபூர்வி சண்டேலா 621.9 புள்ளிகளுடன் 36ஆவது இடத்தையும் பிடித்தனர். நார்வே விராங்கனை 632.9 புள்ளிகளுடன் முதலிடத்தியும் தெங்கொரிய வீராங்கனை 631.9 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தையும் பெற்றார்கள்.
கலப்பு அணி வில்லாளர்கள் – தீபிகா குமாரி, ப்ரவின் ஜாதவ் – இவர்கள் இருவரும் சீனாவின் சி-சுன்-டாங், சி-யா-என் ஜோடியை 5-3 என்ற புள்ளிக் கணக்கில் தோற்கடித்து, காலிறுதிக்கு முன்னேறினார்கள்.
இந்திய டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் அணி அசந்தா ஷரத் கமல், மணிகா பாத்ரா இணை காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சீன ஜோடியிடம் 4-0 என்ற செட் கணக்கில் தோல்வியுற்றனர்.