அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் விழா, சிக்காகோ தமிழ்ச் சங்கத்தின் பொன்விழா,10 ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு என முப்பெரும் விழாவாக நேற்று( 04.07.2019) பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கியது!
பொருளாதார ரீதியாக வளர்ந்த நாடான அமெரிக்காவில் நடைபெறுகின்ற மாநாடு என்பதால் மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது!
அப்படி எதிர்பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் தான் கிடைத்தது!
மாநாட்டு அரங்க அமைப்பு ஏதோ நம்ம ஊரில் இருக்கும் பஞ்சாயத்து திருமணம் கூடம் போன்ற ஒரு அரங்கில் மேடை அமைத்து அம் மேடையில் நின்ற கோலத்தில் ஒரு மைக்கையும் ஒரு போடியத்தையும் கண்டபொழுது தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்கும் நாடான அமெரிக்காவில்தான் இம்மாநாடு நடைபெறுகிறதா அல்லது சோமாலியாவில் நடைபெறுகிறதா என்ற ஐயத்தைப் பார்வையாளர்கள் மனதில் ஏற்படுத்தியது.
இன்னொரு பக்கம் உணவுக்கூடத்தில் போடப்பட்டிருந்த மேசைகளும் இரும்பு மடக்கு நாற்காலிகளும் சோமாலியாவில் கூட இத்தகைய நாற்காலிகள் பயன்பாட்டில் இல்லையே என்றே உணரமுடிந்தது!
நிகழ்ச்சி தொடங்கி எடுத்த எடுப்பிலேயே திரைப்படப் பாடல்கள் அரைகுறை நடனங்கள் பார்ப்பதற்குக் கோமாளித்தனமான அரங்கேற்றமாகவே பட்டது!
இந்தச் சிகக்காகோ மாநாடு தமிழை உலக அரங்கில் தலைநிமிரச் செய்யுமா என்றால் இல்லை என்று ஆணித்தரமாக அடித்துச் சொல்லி விடலாம்!
கடைசி நேரத்தில் மாநாட்டு குழுவினரால் கடிதம் அனுப்பப்பட்டு அமெரிக்க விசா சரியான காலத்தில் கிடைக்காததால் பல தமிழறிஞர்கள் சென்னையில் வாரக்கணக்கில் விசாவுக்காக காத்திருந்து செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது!
தவறு எங்கே நடந்தது என்றால் ஆண்டு விழாவையும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டையும் ஒன்றென கருதி அரைகுறை அனுபவத்துடன் அரங்கேற்றம் செய்ததே இதற்கு காரணம்!
இத்தகைய உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை பல்கலைக்கழகங்களுடன் இணைந்து நடத்தும் போது மட்டுமே உலகத் தரத்திற்குக் கல்வி மற்றும் ஆராய்ச்சி சார்ந்த அறிவு பூர்வமான மாநாட்டை முன்னெடுக்க முடியும்!
இல்லையென்றால் உலக அரங்கில் நமக்கு நாமே அவமானப் படுத்திக்கொள்ளும் ஒரு அரங்கேற்றமாகத்தான் அமையும்!
– சிதம்பரம் குப்புசாமி (உதவிப் பேராசிரியர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் / பொறுப்பாளர், உலகத் தமிழர் பண்பாட்டுத்தகவல் மையம்)