சென்னை:
சென்னை, தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடந்த 17-ந்தேதி மாணவர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனை தொடர்ந்து தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டிக்கான தடையை நீக்கும் வகையில் அவசர சட்டத்தை கடந்த 23-ந்தேதி கொண்டு வந்தது. அதன் பின்னரும் மாணவர்கள் நடத்திய போராட்டம் முடிவுக்கு வரவில்லை. இதனால் மெரினாவில் குவிந்திருந்த மாணவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் ஐஸ் அவுஸ், திருவல்லிக்கேணி, அரும்பாக்கம், கோயம்பேடு, வியாசர்பாடி உள்ளிட்ட இடங்களில் கலவரம் வெடித்தது. இந்த போராட்டத்தின் உச்சக்கட்டமாக ஐஸ்அவுஸ் போலீஸ் நிலையம் தீ வைத்து கொளுத்தப்பட்டது.
மெரினாவில் நடந்த மாணவர்கள் போராட்டத்தில் எந்தவித வன்முறை சம்பவங்களும நடைபெறாத நிலையில், அவர்களுக்கு ஆதரவாக நடந்த போராட்டங்களிலேயே சமூக விரோத கும்பல் ஊடுருவி பெரும் கலவரத்தை ஏற்படுத்தியது. போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. போலீஸ் வாகனங்கள் நொறுக்கப்பட்டதுடன் தீ வைப்பு சம்பவங்களும் அரங்கேறின. இதனால் கடந்த திங்கட்கிழமை சென்னை மாநகரில் பல இடங்கள் போர்க்களம் போல காட்சி அளித்தன.
இதனிடையே கலவரத்தை பயன்படுத்தி போலீசாரே வாகனங்களுக்கு தீ வைத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் பெண் போலீஸ் ஒருவர் ஆட்டோவுக்கு தீ வைக்கும் காட்சியும், போலீஸ்காரர் ஒருவர் வாகனங்களை லத்தியால் அடித்து நொறுக்கும் காட்சிகளும் வீடியோ பதிவுகளாக பரவின. வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவிய இது போன்ற வீடியோக்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
இது தொடர்பாக பேட்டி அளித்த சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், போலீசார் தவறு செய்திருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருந்தார். இதைத் தொடர்ந்து சென்னையில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். கலவரத்தில் ஈடுபட்ட 300 பேர் வரை இதுவரைகைது செய் யப்பட்டுள்ளனர். மேலும் பலரைத் தேடி வருகிறார்கள்.
கலவரத்தை பயன்படுத்தி தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட பெண் போலீஸ் மீதும், வாகனங்களை சேதப்படுத்திய போலீஸ்காரர் மீதும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதில் இவர்கள் இருவரும் அடையாளம் காணப்பட்டனர்.
இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் பெண் போலீசும், போலீஸ்காரரும், யார் என்பதை உயர் போலீஸ் அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர். இவர்கள் 2 பேர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. பெண் போலீஸாரும், போலீஸ்காரரும் சஸ்பெண்டு செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.