சென்னை:
தனியார் பால் விலை மீண்டும் உயர்ந்துள்ளதை தடுத்து நிறுத்துமா தமிழக அரசு என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனர் & மாநில தலைவர் சு.ஆ.பொன்னுசாமி அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் பாலுக்கான கொள்முதல் விலை மற்றும் வாகன எரிபொருள் விலையில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படாத சூழ்நிலையில் ஆந்திராவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தனியார் பால் நிறுவனமான ஹெரிடேஜ் நிறுவனம் வரும் புதன்கிழமை (01.02.2017) முதல் தங்களுடைய பால் மற்றும் தயிருக்கான விற்பனை விலையை லிட்டருக்கு 2.00ரூபாய் முதல் 5.00ரூபாய் வரை உயர்த்துவதாக எங்களது பால் முகவர்களுக்கு சில தினங்களுக்கு முன் சுற்றறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது.
ஏழை, எளிய, நடுத்தர மக்களை பாதிக்கின்ற வகையில் தன்னிச்சையாக ஹெரிடேஜ் நிறுவனம் அறிவித்துள்ள பால் மற்றும் தயிருக்கான விற்பனை விலை உயர்வு அறிவிப்பினைத் தொடர்ந்து இதர தனியார் பால் நிறுவனங்களும் தங்களின் பால் மற்றும் தயிருக்கான விற்பனை விலையை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிகிறது.
அதுமட்டுமன்றி தமிழகத்தில் நாளொன்றுக்கு தேவையான பாலில் 83.4% பால் தேவைகளுக்கு தனியார் நிறுவனங்களையே பொதுமக்கள் சார்ந்திருப்பதாலும், சுமார் 95% தேனீர் கடைகள், உணவகங்கள் போன்றவை தனியார் பாலினையே உபயோகப்படுத்தி வருவதாலும் இந்த தன்னிச்சையான பால் விற்பனை விலை உயர்வின் காரணமாக தேனீர், காபி மற்றும் பால் சார்ந்த உணவுப் பொருட்களின் விற்பனை விலையும் கடுமையாக உயரும் ஆபத்து இருக்கிறது. எனவே மேற்கண்ட தனியார் பால் நிறுவனத்தின் பால் மற்றும் தயிருக்கான விற்பனை விலை உயர்வு விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு அதனை தடுத்து நிறுத்திட வேண்டும் என மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம்.
மேலும் “ஆவின் நிறுவனம்” கொள்முதல் மற்றும் விற்பனை செய்கின்ற பாலுக்கான விலையை மட்டுமே தமிழக அரசு நிர்ணயம் செய்வதால் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் பால் வணிகத்தில் ஈடுபட்டு வரும் அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் தங்களின் சுயநலத்திற்காக, சுயலாபத்திற்காக பொதுமக்கள் மீது பாரத்தை சுமத்துகின்ற வகையில் குறைந்தபட்சம் ஆண்டுக்கு இரண்டு முதல் மூன்று முறை வரை பால் விற்பனை விலையை தன்னிச்சையாக உயர்த்துவதையும், தங்களின் பால் விற்பனை குறையும் போதெல்லாம் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்கின்ற பாலுக்கான விலையை தன்னிச்சையாக குறைப்பதையும் வாடிக்கையாக கொண்டிருக்கின்றன. இதன் காரணமாக பால் விற்பனை விலை உயரும் போதெல்லாம் பொதுமக்களும், பால் கொள்முதல் விலை குறையும் போதெல்லாம் பால் உற்பத்தியாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதுமட்டுமன்றி தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வறட்சி காரணமாக பால் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக தமிழகத்தில் கடுமையான பால் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலையும் உருவாகி வருவதால் இதை பயன்படுத்திக் கொண்டு அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் இந்த (2017) ஆண்டில் பால் விற்பனை விலையை அடிக்கடி உயர்த்துகின்ற தன்னிச்சையான முடிவினை எடுப்பார்கள்.
எனவே தமிழர்களின் கலாச்சாரமான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்திட “அவசர சட்டம்” இயற்றியதைப் போன்றும், ஆட்டோ, பேருந்து கட்டணங்களை வரன்முறைபடுத்தி தொடர்ந்து அதற்கான கட்டணங்களை நிர்ணயம் செய்து வருவதைப் போன்றும், தமிழகத்தில் நாளொன்றுக்கு தேவையான பாலில் 16.6% (சுமார் 25லட்சம் லிட்டர்) பால் தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்கின்ற “ஆவின் நிறுவனம்” கொள்முதல் மற்றும் விற்பனை செய்கின்ற பாலுக்கான விலையை நிர்ணயம் செய்வதைப் போன்றும், அத்தியாவசியமான, உயிர் காக்கும் பொருளாக விளங்கி வரும் பால் வணிகத்தில் தமிழகத்தில் தினமும் 83.4% (சுமார் 1கோடியே 25லட்சம் லிட்டர்) பால் தேவைகளை பூர்த்தி செய்து வரும் தனியார் பால் நிறுவனங்களை வரன்முறைபடுத்தி, அவை கொள்முதல் மற்றும் விற்பனை செய்கின்ற பாலுக்கான விலையை தமிழக அரசே நிர்ணயம் செய்கின்ற வகையில் உடனடியாக “கொள்கை ரீதியில் முடிவெடுத்து” அதற்கான “அவசர சட்டம்” இயற்றி கோடிக்கணக்கான ஏழை, எளிய மக்களையும், பால் உற்பத்தியாளர்களான லட்சக்கணக்கான விவசாயிகளையும் காத்திட வேண்டுமாய் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை “தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்” சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம்.
மேற்கண்ட கோரிக்கை மனுவை இன்று (30.01.2017) காலை 11.00மணியளவில் சென்னை தலைமை செயலகத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் தனிப்பிரிவிலும், மாண்புமிகு தமிழக பால் வளத்துறை அமைச்சர் மற்றும் பால் வளத்துறை செயலாளர் ஆகியோரிடமும் எங்களது சங்கத்தின் சார்பில் வழங்கி வந்துள்ளதுடன் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை நேரில் சந்திக்க அனுமதி கேட்டும் முதல்வர் அலுவலகத்தில் மனு அளித்து வந்திருக்கிறோம்.