தனிநபர்களின் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதாரை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மும்பை, சென்னை உள்ளிட்ட உயர் நீதிமன்றங்களில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. இவை அனைத்தும் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதாரை இணைப்பது தொடர்பான சட்டம் உருவாக்கும் பரிந்துரை எதுவும் மத்திய அரசிடம் உள்ளதா? என்று நாடாளுமன்ற மக்களவையில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நேற்று எழுத்து மூலம் அளித்த பதிலில் குறிப்பிட்டிருந்ததாவது:-
தனி நபர்களின் சமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதாரை இணைப்பது தொடர்பாக சட்டம் இயற்றும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை. ஆதாரின் கொள்கை மற்றும் வடிவமைப்பு அடிப்படையில் ஆதார் ஆணையமே தனி நபர்களின் தகவல்களை சேகரிக்கவும், அவர்களை கண்காணிக்கவும் தடை விதிக்கிறது.
ஆதாரின் ஒட்டுமொத்த பயோமெட்ரிக் தகவல்கள் அனைத்தும் குறியாக்கம் செய்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. அவை ஒருபோதும் பகிரப்படாது. ஒட்டுமொத்த ஆயுள் சுழற்சியில் ஒரு ஆதார் தரவுத் தொகுப்பானது, அதன் உருவாக்கம் மற்றும் மேம்படுத்துதலின்போது, தனிநபர் அளிக்கும் தகவல்களை மட்டுமே கொண்டிருக்கும். அதில் குறிப்பிட்ட நபர்கள் அவர்களின் செல்போன் எண், இ-மெயில் முகவரி போன்றவற்றை அளித்திருந்தால் மட்டுமே அவை இணைக்கப்பட்டு இருக்கும்… என்று குறிப்பிட்டிருந்தார்.
வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஆதார் அட்டை வழங்கும் திட்டம் குறித்து ஒரு கேள்வி எழுப்பப் பட்டிருந்தது. அதற்கு அவர் அளித்த பதிலில்… ‘வெளிநாடுவாழ் இந்தியர்கள், நாடு திரும்பியபின் அவர்களுக்கும் ஆதார் அட்டை வழங்கப்படும். இந்தத் திட்டத்தை கடந்த செப்டம்பர் 20-ந்தேதி முதல் ஆதார் ஆணையம் நடைமுறைப்படுத்தி வரும் நிலையில், கடந்த 14-ஆம் தேதி வரை வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு 2,800 ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன’ என்று குறிப்பிட்டுள்ளார்.